தம்பி வாழ்க்கைக்காக தனது 14 வருடம் போராடும் அண்ணன்.. குமரியில் பாசப்போராட்டம்!

by Sasitharan, Feb 6, 2021, 19:36 PM IST

ராமாயணத்தில் படித்த அண்ணன் தம்பிபோல், குமரி மாவட்டத்தில் அண்ணன் தம்பி உள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கன்னியாகுமரி கேரள எல்லையில் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் 33 வயதான லிஜோ என்பவருக்கு தனது 19 வயதில் திடீரென அவருக்கு வைரஸ் காய்ச்சல் வந்துள்ளது. வைரஸ் காய்ச்சல் தானே என்று நினைத்த லிஜோவிற்கு இந்த காய்ச்சல் அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளது.

கல்லூரியில் படித்து சந்தோஷமாக சுற்றித்திறியும் வயதில், சிகிச்சை பலனளிக்காததால் கை, கால்கள் செயலற்ற நிலைக்கு சென்று படுத்த, படுக்கைக்கு லிஜோ சென்றுவிட்டார். தொடர்ந்து 3 வருடங்களாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்தும், எந்தவித முன்னேற்றமும் இல்லை. இருப்பினும், வெண்டிலேட்டர் உதவியுடன் தற்போது லிஜோ படுக்கையில் வாழ்ந்து வருகிறார்.

இருப்பினும், தம்பியை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று அண்ணன் விபின் பாச போராட்டத்தில் 14 வருடங்களாக போராடி வருகிறார். இன்றைய காலத்தில் ஒரு சென்ட் இடத்திற்கு சண்டை போட்டு குடும்பம் பிரியும் நிலையில், தம்பிக்காக, அண்ணன் விபின் சொத்துகளை இழந்துள்ளார். குடும்ப வாழ்க்கையை இழந்துள்ளார். இதுவெல்லாம் தன்னுடைய ஒரே தம்பிக்காக என்று சொன்னால் அது மிகையாகாது. தம்பியை காப்பாற்ற டாக்டர்கள் கைவிட்ட நிலையிலும், அவருடைய சொந்த பந்தம் கைதூக்கி விடாத நிலையிலும் 14 வருடமாக தம்பிக்காக ஒரு பாசப்போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

இது குறித்து விபின் கூறுகையில், என்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் அண்ணா, சொத்துகளை விற்றாவது என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விடு அண்ணா என தம்பி லிஜோ உருக்கமாக பேசினான். அந்த குரல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு வார்த்தைக்காக அவனை காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறேன், படுத்த படுக்கைக்கு சென்றாலும் லிஜோவுடன் தினமும் பேசி மன உறுதியை ஏற்படுத்தி வருகிறேன் என்றார்.

மேலும் கூறுகையில், தம்பிக்காக சொத்துகளை இழந்த தற்போது, கடனாளியாகி வாடகை வீட்டில் உள்ளேன். வாடகை வீட்டில் தான் தம்பிக்கு வெண்டிலேட்டர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறேன். கழுத்துக்கு கீழே முழுவதும் செயல் இழந்து உள்ளான். நான் இருக்கும் வரை என்னுடைய தம்பியை சாக விட மாட்டேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இந்த பாசப்போராட்டத்துக்கு இடையே விபினின் மனைவி மனநோயாளியாகி விட்டார். குழந்தைகளை படிக்க வைக்க முடியாத நிலை உருவானது, விபினின் வேலையும் பறிபோனது. ஏதாவது பணம் கொடுக்க வேண்டியிருக்கும் என கருதி சொந்த பந்தமும் விபினை விட்டு விலகியது. எனினும் விபின் துவண்டு போகவில்லை. தொடர்ந்து பாசப்போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்த காலத்தில் இப்படி ஒரு அண்ணன் உள்ளது உலகளவில் உள்ள அனைத்து தம்பிகளுக்கும் கிடைக்காத வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

You'r reading தம்பி வாழ்க்கைக்காக தனது 14 வருடம் போராடும் அண்ணன்.. குமரியில் பாசப்போராட்டம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை