தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்! - எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு பாரதிராஜா கண்டனம்

தமிழ்நாட்டை ஒரு போர்க்களமாக மாற்ற நினைக்கும் இதுபோன்ற ஆட்களை, கடுமையான தண்டனை கொடுத்து தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

by Lenin, Apr 19, 2018, 08:22 AM IST

தமிழ்நாட்டை ஒரு போர்க்களமாக மாற்ற நினைக்கும் இதுபோன்ற ஆட்களை, கடுமையான தண்டனை கொடுத்து தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் நிர்மலா தேவி விவகாரம் குறித்து பன்வாரிலால் புரோஹித்திடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பெண் நிரூபர் ஒருவர் கேள்வி எழுப்ப முயன்றார்.

அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்த பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தை தட்டினார். தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து அந்த பெண் பத்திரிக்கையாளர் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைபிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இல்லாமல், அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை” என கனிமொழி பதிவிட்டார்.

இதனையடுத்து கனிமொழி குறித்து நாகரிகமற்ற முறையில் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்.ராஜா பதிவிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (Illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா? மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே" என குறிப்பிட்டுள்ளார்.

ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, திமுகவினர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை, கோவை, மேலூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

கனிமொழி குறித்த எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு, பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாக்கில் சனி பிடித்து, நாகரிகம் மறந்துபேசும் எச்.ராஜாவின் ட்விட்டர் பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தில் ஆறு முறை முதல்வராக இருந்த திராவிட இயக்கத்தில் சுயமரியாதைத் தலைவர், பெரியவர் கலைஞரின் குடும்பத்தை இழிசொல்லால் இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. கலைஞரின் கைபிடித்து ராசாத்தி அம்மாளின் மகள் கனிமொழி, உனக்குத் தவறான உறவில் பிறந்தவரா?

சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சினையைத் திசைதிருப்ப, நீ நடத்தும் இந்த நாடகத்தை எம் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். யாரையோ காப்பாற்ற, யாரையோ பலியிடும் இந்தப் பிரச்சினையைச் சற்று உற்று நோக்குங்கள். அடிக்கடி தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த நினைத்து, கந்தக வார்த்தைகளை வீதியில் வீசும் எச்.ராஜா மாதிரி ஆட்களை இன்னும் வீதியில் உலவவிட்டுக் கொண்டிருக்கிறோமே... அதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு.

ஆளும் அரசியல்வாதிகள் நாகரிகம் மறந்து, இப்படி அநாகரிகமாகப் பேசி, தமிழ்நாட்டை ஒரு போர்க்களமாக மாற்ற நினைக்கும் இதுபோன்ற ஆட்களை, கடுமையான தண்டனை கொடுத்து தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள். விழித்துக்கொள் தமிழா, விழித்துக்கொள். சொரணை கெட்டவர்கள் அல்ல தமிழர்கள், என்றும் துணிந்து நிற்போம்.

தாய்மார்களே... தமிழகம் உங்கள் கையில். மாணவ மணிகளே... தமிழகம் உங்கள் கையில். தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம் தீய சக்திகளை. ஒன்றுபடுங்கள், உரத்த குரல் கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தொடைப்பத்தால் விரட்டி அடிப்போம்! - எச்.ராஜாவின் ட்வீட்டுக்கு பாரதிராஜா கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை