உரிமம் இல்லாவிட்டால்...மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு..

by Radha, Jun 26, 2018, 14:17 PM IST
உரிமம் இல்லாமல் செயல்படும் உணவகங்களை ஆய்வு செய்து அவற்றின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
வாகன நிறுத்துமிடம் இல்லாத உணவகங்களை மூடக் கோரிய வழக்கு  நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன்  அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள 2,806 உணவகங்களில் 2,445 உணவகங்கள் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி விட்டு காவல் துறையில் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், அதனடிப்படையில் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 
 
உரிமத்தை புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக செயல்படும் 361 உணவகங்களை ஆய்வு செய்து அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பணிகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  உரிமத்தை புதுப்பிக்காமல் செயல்படும் உணவகங்களை ஆய்வு செய்து அவற்றின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
மேலும் சென்னை மாநகருக்கான இரண்டாவது மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ், கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும்போது, வாகன நிறுத்தும் வசதி இருந்தால் தான், உணவகங்களுக்கு உரிமம் வழங்கப்படுவதை சி.எம்.டி.ஏ. கட்டாயமாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
 
இதனையடுத்து வழக்கை ஜூலை 30-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

You'r reading உரிமம் இல்லாவிட்டால்...மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை