பேருந்தை தவறவிட்டால் புலிகள் சரணாலயம் தான் ஒரே வழி: குண்டுரி மாணவர்களின் அவல நிலை

by Isaivaani, Jan 4, 2018, 18:24 PM IST

ஈரோடு: தாங்கள் கல்வி பயில, பேருந்து வசதியின்றி 19 கி.மீ தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் குண்டுரி கிராமத்தை சேர்ந்த மாணவர்களின் அவல நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே குண்டுரி என்ற மலையடி கிராமம் உள்ளது. இதனை சுற்றி 26 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு, சுமார் 5000 பேர் வசிக்கின்றனர். இந்த கிராம வாசிகளுக்கு விவசாயத் தொழில் தான் வாழ்வாதாரமாக உள்ளது.

குடும்ப சூழல், பொருளாதார பிரச்னை என பல்வேறு இன்னல்களுக்கிடையே குண்டுரி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பெரும்பாடுபட்டு பள்ளிக்கு சென்று வரும் அவலம் தான் அங்கு ஏற்பட்டுள்ளது.

ஆம். இங்கு, 1910ம் ஆண்டில் ரோமன் கத்தோலிக்கர்கள் ஆரம்பித்த துவக்கப்பள்ளி ஒன்று 1975ம் ஆண்டில் அரசு உதவி பெறும் தனியார் நடுநிலைப்பள்ளியாக தற்போது வரை செயல்பட்டு வருகிறது. பண வசதியின்மை உள்ளிட்ட காரணத்தால், குண்டுரி கிராம மாணவர்கள் 19 கி.மீக்கு தொலைவில் கடம்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தான் படிக்கின்றனர். இந்த தொலைவும் சாதாரணமாக மாணவர்கள் கடப்பதில்லை.

குண்டுரி கிராமத்தில் இருந்து மாணவர்கள், சத்தியமங்கலம் பேருந்து நிறுத்துமிடத்திற்கு நடந்து சென்று, அங்கு காலை 5.30 மணிக்கு வரும் பேருந்தை பிடித்து 19 கி.மீ தொலைவில் உள்ள கடம்பூர் அரசு பள்ளிக்கு செல்ல வேண்டும். அதாவது, சத்தியமங்கலத்தில் இருந்து பள்ளிக்கு செல்ல சுமார் இரண்டரை மணி நேரம் பயணம் ஆகிறது.

இதேபோல், பள்ளி வகுப்பு மாலை 4.30 மணிக்கு முடிந்தாலும், இரவு 8.30 மணிக்கு தான் மாணவர்கள் பேருந்தை பிடிக்க முடியும். காரணம், குண்டுரியில் இருந்து வருவதற்கும் திரும்ப செல்வதற்கும் இரண்டே பேருந்து தான் விடப்பட்டிருக்கிறது. ஒன்று காலை 5.30 மணிக்கு மற்றொன்று இரவு 8.30 மணிக்கு. இடைப்பட்ட நேரத்தில் பேருந்து சேவையே கிடையாது. இதனால், மாணவர்கள் தினமும் பெரும் அவதியுடன் தான் பள்ளிக்கு சென்று வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள், காலை 5.30 மணி பேருந்தை பிடிக்க அதிகாலை 4 மணிக்கே எழுந்து புறப்பட வேண்டும். அப்படி பேருந்தை பிடிக்க முடியாவிட்டால், சத்தியமங்கலம் புலி சரணாலயத்தின் கரடுமுரடு பாதை தான் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கான ஒரே வழி. அதேபோல், இரவு 8.30 மணிக்கு பேருந்தை பிடித்தால் இரவு 10 மணிக்கு தான் மாணவர்கள் வீட்டிற்கு செல்கின்றனர். கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் இதே நிலை தான். 

மாணவர்களின் இந்த அவல நிலை குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து அமைச்சர் மேற்கொண்டு கூறியதாவது: குண்டுரி கிராம பள்ளி மாணவர்களுக்கு என தனியாக மினி பேருந்து ஏற்பாடு செய்ய போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும். அடுத்த கல்வியாண்டில் குண்டுரியில் உள்ள தனியார் உயர் நிலைப் பள்ளியை மேல் நிலை பள்ளியாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களின் நேரத்திற்கு ஏற்ப பேருந்தின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் பாலமுரளி கடிதம் எழுதி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading பேருந்தை தவறவிட்டால் புலிகள் சரணாலயம் தான் ஒரே வழி: குண்டுரி மாணவர்களின் அவல நிலை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை