சுற்றுச்சூழல் சட்டங்களை வளைத்து நியூட்ரினோ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

by Isaivaani, Jan 8, 2018, 21:11 PM IST
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  தேனி மாவட்டம் தேவாரம் அருகிலுள்ள பொட்டிபுரத்தில், நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க மத்திய அரசின் அணுசக்தித் துறை பெற்றிருந்த சுற்றுச்சூழல் அனுமதியை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கின் காரணமாக  "தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்" தென்னக அமர்வு கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரத்து செய்தது.
பசுமைத் தீர்ப்பாணையம், நியூட்ரினோ ஆய்வகம் தொடர்பாக அளித்த தீர்ப்பில், திட்டம் அமையவிருக்கிற இடம் இரண்டு மாநில எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் இருப்பதால், இந்தத் திட்டம் "ஆ" பிரிவு திட்டம்தான் என்று வரையறுத்து தீர்ப்பு வழங்கியது.
மதிகெட்டான் சோலை என்கிற தேசியப் பூங்காவின் எல்லையில் இருந்து 4.9 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் திட்டம் அமைய இருப்பதால், தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி வாங்கத் தேவையில்லை என்கிற அரசுத் தரப்பின் வாதத்தையும் பசுமைத் தீர்ப்பாயம் ஏற்றுக் கொள்ளவில்லை.
பல லட்சக்கணக்கான கிலோ வெடி மருந்துகளைப் பயன்படுத்தி, பல லட்சக்கணக்கான டன் பாறைகளை உடைக்கும்போது சூழலில் ஏற்படும் விளைவுகளை கவனத்தில் கொள்ளாமல் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பூவுலகின் நண்பர்கள் எடுத்தவைத்த வாதத்தை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது. இவ்வாறு பல அடிப்படைக் காரணங்களினால் பசுமைத் தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை மதிக்காமல் கடந்த மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை "சிறப்புத் திட்டம்" ஆகக் கருதி நியூட்ரினோ திட்டத்திற்கு பிரிவு "ஆ" திட்டமாக வகைப்படுத்தி சட்டத்திற்குப் புறம்பாக "சுற்றுச்சூழல்" அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.  மத்திய அரசின் இந்த செயல் கண்டனத்திற்குரியது.
சுற்றுச்சூழல் குறித்த அரசுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில் “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்கிற தலைப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, “நாட்டின் சுற்றுச்சூழலை அரசு பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வேண்டும். மேலும் நாட்டிலுள்ள காடுகளையும், காட்டு விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு மற்றும் அரசு அமைப்புகள் முயற்சி எடுக்க வேண்டும்” என தெளிவாகக் குறிப்பிட்டுள்ள போதினும் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சட்டத்திற்குப் புறம்பாக அனுமதியளித்தால் அது இந்திய அரசியமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.
 அதேபோல் ஸ்டாக்ஹோம் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு உலகில் பல நாடுகள் தானாக முன்வந்து சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை வகுத்துக் கொண்டன. இந்திய நாடாளுமன்றமும் இதற்கு ஆதரவு தரும் வகையில் ஏற்கனவே இருந்த சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்ததுடன் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான வலிமையான பல புதிய சட்டங்களை இயற்றியது. இச்சட்டங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைத்தால் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
 எனவே, தேனியில் அமைக்க உத்தேசித்துள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கான அனுமதியை குறுக்கு வழியில் மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கக் கூடாது என்றும், பேராபத்தை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

You'r reading சுற்றுச்சூழல் சட்டங்களை வளைத்து நியூட்ரினோ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை