சேலத்தை ஆட்டுவிக்கும் நிழல் முதல்வர் - எடப்பாடியிடம் முறையிட்ட அதிமுகவினர் Exclusive

Salem Senior AIADMK leaders upset over CM Edappadis Right hand

Dec 2, 2018, 08:44 AM IST

சேலம் மாவட்டத்தில் வலம் வரும் தமிழகத்தின் நிழல் முதல்வரால் உச்சகட்ட ஆத்திரத்தில் இருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். 'எடப்பாடியின் வலதுகரமான கூட்டுறவு சங்க சேர்மன் இளங்கோவனால், கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இவரால் மூத்த நிர்வாகிகள் பலரும் பதவியைப் பறிகொடுத்துவிட்டனர்' என ஆதங்கப்படுகின்றனர்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இறந்த சில நாள்களில் வருமான வரித்துறை சோதனைகள் களைகட்டின. தலைமைச் செயலகத்திலேயே சோதனைகள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக சேலத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஐ.டி ரெய்டு நடந்தது. கூட்டுறவு வங்கிகளை குறிவைக்கக் காரணம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கூட்டுறவு வங்கிகளில் பலரது பெயர்களில் போலியாக வரவு வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளின் தலைவராக எடப்பாடியின் வலதுகரமான இளங்கோவன் இருக்கிறார். கூட்டுறவு வங்கிகளில் பணம் வந்த விவரத்தை சேகரித்துவிட்டால் எடப்பாடியை வளைத்துவிடலாம் என்ற நோக்கத்தில் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டில் எட்டு அட்டைப் பெட்டிகளில் போலியான வங்கிக் கணக்குப் புத்தங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர். இளங்கோவன் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விவகாரத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இப்போது கட்சி நிர்வாகிகள் மாற்றத்திலும் இளங்கோவனின் தலை உருள்கிறது.

இதைப் பற்றி கோபத்துடன் பேசும் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் சிலர், ' சேலம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்டப் பொறுப்பில் இருந்த பெரியசாமி, தாலுகா கூட்டுறவு சங்கத் தலைவர் பதவியை எதிர்பார்த்தார். அவருக்கு அந்தப் பதவியைக் கொடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்தும் டம்மியாக்கிவிட்டார்.

தன்னை எதிர்ப்பவர்கள் யாரும் மாவட்டத்துக்குள் இருக்கக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார் இளங்கோவன். எடப்பாடி பழனிசாமி கையில் இருக்கும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்ட்டுகளை எல்லாம் இளங்கோவன்தான் கவனித்து வருகிறார்.

அதிகாரிகள் மாற்றம், அரசு ஒப்பந்தம் என நாளுக்குநாள் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டே போகிறார் இளங்கோவன். அமைச்சராக இருந்திருந்தால்கூட இந்தளவுக்குக் கல்லா கட்டியிருக்க முடியாது என நினைக்கும் அளவுக்கு சொத்து சேர்த்துவிட்டார்.

அதனால்தான் இவரைக் குறிவைத்து இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் வந்தனர். பல தலைமுறைகளுக்கு அவர் சொத்து சேர்த்துவிட்டார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடிக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அது இளங்கோவனால்தான் நடக்கும். அந்தளவுக்கு பரிவர்த்தனைகள் வெளிப்படையாக நடக்கின்றன.

இதை உணர்ந்திருந்தும் இளங்கோவனை ஒதுக்கி வைக்க முடியாமல் அமைதியாக இருக்கிறார் எடப்பாடியார்' என்கின்றனர்.

- அருள் திலீபன்

You'r reading சேலத்தை ஆட்டுவிக்கும் நிழல் முதல்வர் - எடப்பாடியிடம் முறையிட்ட அதிமுகவினர் Exclusive Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை