கண் ஆபரேஷன் செய்த தம்மை பார்க்காத தினகரன்... என் மேல ஏன் இவ்வளவு கொலவெறி? கொதிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்

Thangatamilselvan upsets over Dinakaran

Jan 3, 2019, 13:16 PM IST

அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனோடு தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறார் தங்க.தமிழ்ச்செல்வன். இந்த மோதல் எங்கு போய் முடியப் போகிறதோ எனக் கவலையோடு பேசுகின்றனர் அமமுக பொறுப்பாளர்கள்.

தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு கடும் மனச் சோர்வில் உள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் 18 பேர் வழக்கில் எந்த முன்னேற்றமும் வரப்போவதில்லை என்ற விரக்தியில் உள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி, தினகரனைத் தவிர யார் வந்தாலும் வரவேற்போம் எனக் கூறியிருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதற்குப் பதில் அளித்த தங்க.தமிழ்ச்செல்வனோ, ' டி.டி.வி.தினகரனுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவது ஆளும் கட்சியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

நாங்கள் தொடக்க காலத்தில் இருந்தே அதிமுகவில் நீடிக்கிறோம். ஜெ அணி, ஜா அணியாகப் பிரிந்தபோதும் அம்மா பக்கம் நின்றோம்.

எந்தக் காலத்திலும் அதிமுகவில் இருந்து எங்களைப் பிரிக்க முடியாது.

தற்காலிக ஏற்பாடாகத்தான் அமமுகவில் நீடிக்கிறோம். 18 எம்.எல்.ஏ.க்களான நாங்கள் நட்புக்கு மதிப்பு கொடுத்து டி.டிவி.தினகரன் அணியில் இருக்கிறோம். முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள். ஊழல் வாதிகள். அனைத்து அமைச்சர்களும் ஊழல்களில் ஜொலிக்கின்றனர்.

ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் வீட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளார்கள்' எனப் பேசினார்.

ஆனாலும், தொலைக்காட்சி விவாதம் உள்பட கட்சி நிகழ்ச்சிகளில் அவர் முன்னிறுத்தப்படுவதை தினகரன் விரும்புவதில்லையாம்.

அவரை வளர்த்துவிடுவது மேலும் ஆபத்தைக் கொடுக்கும் என நினைக்கிறாராம். திருவாரூர் தொகுதி தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டதால், தங்க.தமிழ்ச்செல்வன் விஷயத்தில் மௌனம் காக்கிறாராம். சசிகலாவை முன்னிறுத்தி தங்கத் தமிழ்ச்செல்வன் செயல்படுவதையும் அவர் கடுப்புடன் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த பத்து நாள்களாக கண் அறுவை சிகிச்சை செய்துவிட்டு ஓய்வில் இருக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன். இந்த பத்து நாளில் ஒருநாள்கூட தினகரன் அவரைப் போய்ப் பார்க்கவில்லையாம். என் மேல கொலைவெறியில இருக்கார்னு நினைக்கிறேன் என அமமுகவினரிடம் சிரித்தபடியே கூறியிருக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்.

- அருள் திலீபன்

You'r reading கண் ஆபரேஷன் செய்த தம்மை பார்க்காத தினகரன்... என் மேல ஏன் இவ்வளவு கொலவெறி? கொதிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை