முதல் மாநிலமாக, ஒடிசாவில் ஊரடங்கு ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 17ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், கொரோனா பரவாமல் தடுக்க, மக்கள் சமூக இடைவெளியை முழு அளவில் பின்பற்றச் செய்ய வேண்டும். இதற்காக நாம் சில கடினமான முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது என்று தெரிவித்தார். எனவே, நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், ஒடிசாவில் ஊரடங்கை வரும் 30ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வரும் 30ம் தேதி வரை ரயில் மற்றும் விமானச் சேவைகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஜூன் 17ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை நீட்டித்தும் முதல்வர் நவீன்பட்நாயக் அறிவித்துள்ளார்.