20 வருட சினிமாவில் எனக்கு முக்கிய படம்.. நடிகர் சூர்யா பேச்சு..
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் 'சூரரைப் போற்று' படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் சூர்யாவுடன் படக்குழுவினர் மற்றும் முதன்முறையாக விமானத்தில் ஏறும் 70 குழந்தைகளும் பங்கேற்றனர். வங்களா விரிகுடா கடலை சுற்றி விமானம் வட்டமடிக்க அப்போது பாடல் வெளியிடப்பட்டது. 'வெய்யோன்சில்லி' என்று தொடங்கும் பாடல் நடுவானில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் சூர்யா இருவரும் வெளியிட்டனர்.
இதுகுறித்து நடிகர் சூர்யா கூறியதாவது :-
எனது 20 வருட சினிமாவில் இந்த படத்தை தான் முக்கியமாக கருதுகிறேன். இப்படம் சிறப்பாக வருவதற்காக இயக்குநர் சுதா 10 வருடங்கள் உழைத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. மேலும், சுமார் 30 நிமிட காட்சிகள் விமானத்தில் எடுக்கப்பட்டது. அதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனதிற்கு மட்டுமல்ல, படப்பிடிப்பின்போது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒவ்வொரு குழுவினருக்கும் நன்றி கூற வேண்டும்.
கண்டுபிடிப்புகள் எப்படி முக்கியமோ அதைவிட பொதுமக்களுக்கு அது எந்தளவு உபயோகமாக இருக்கிறது என்பது மிகவும் முக்கியம். அந்த சிறப்பான செயலை கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் செய்துள்ளார். ஒரு காலத்தில் இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் மக்கள்தான் விமானத்தை உபயோகப்படுத்தினார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்திலேயே ஒரு ரூபாய் கட்டணத்தில் சாதாரண மனிதரையும் பறக்க வைத்து விமான துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து சாதனை புரிந்தவர் ஜி.ஆர்.கோபிநாத். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையைக் கூறும் இந்த படத்தில் நடிப்பதற்காக பெருமிதமடைகிறேன்.
அதேபோல், நானும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கும் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல விரும்பினேன். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் அஜய் சிங்-கின் கடின முயற்சியால் 70 குழந்தைகளுக்கு விமானத்தில் பறக்கும் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த அனுபவம் எனக்கு மட்டுமல்ல எங்கள் குழுவில் உள்ள அனைவருக்குமே வித்தியாசமான அனுபவமாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் இருந்தது.
இவ்வாறு நடிகர் சூர்யா கூறினார்.
நடிகர் சிவகுமார், பட இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர் விவேக், நடிகர் மோகன் பாபு, சோனி மியூசிக் அசோக் ஆகியோர்களுடன் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
You'r reading 20 வருட சினிமாவில் எனக்கு முக்கிய படம்.. நடிகர் சூர்யா பேச்சு.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News