ராம நாராயணனுக்கு சிலை வைக்க கோரிக்கை.. 126 படம் இயக்கி கின்னஸில் இடம் பிடித்தவர்..

Producer Demand Satue fot Gunnes Film Director RamaNarayann

by Chandru, Jun 22, 2020, 15:17 PM IST

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி. வசனகர்த்தா மற்றும் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தவர் எனப் பன்முகம் கொண்டவர் ராம நாராயணன். அவரது நினைவு நாளையொட்டி தயாரிப்பாளரும் பத்திரிகை தொடர்பாளர் சங்கத் தலைவருமான விஜய் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:எளிமையே வலிமை என வாழ்ந்தவர் இராம நாராயணன் இன்று (22.06.2020) அவரது நினைவு நாள் 1970களில் ராம் - ரஹீம் என்ற இரட்டையர்கள் நாடகத்திற்குக் கதை வசனம் தந்து கொண்டிருந்தார்கள். இரட்டையரில் ராம் என்ற பெயரில் வலம் வந்தவர் தான் இராம நாராயணன். ரகீம் என்ற பெயரில் உலா வந்தவர் எம்.ஏ. காஜா. கவியரசு கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்து படங்களுக்குப் பாடல் எழுத வந்தவர் இராம நாராயணன்.


எம்.ஏ. காஜா இயக்கத்தில் பல படங்களை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தயாரித்தார். கமலின் விக்ரம், ரஜினியின் படிக்காதவன் படங்களை இயக்கிய ராஜசேகர் இயக்கத்திலும் படங்களைத் தயாரித்தவர் இவர்."சுமை" "சோறு" படங்களின் கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமானார் இராம நாராயணன்.வர்த்தக ரீதியில் அந்த படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால் அன்று பத்திரிகைகள் இந்த இரண்டு படங்களின் விமரிசனத்திலும் இயக்குனர் இராம நாராயணன் அவர்களைச் சிறந்த இயக்குனராக தேர்வு செய்து கொண்டாடின.

இராம நாராயணன் தான் இயக்கிய "நன்றி" என்ற படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.முன்னாள் துணை முதல்வரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது இயக்கத்தில் இரு படங்களில் நடித்தவர் என்பதைப் பெருமைக்குரியதாகக் கருதினார் இராம நாராயணன். மேலும் இவருடைய இயக்கத்தில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த், பிரபு, பாண்டியன், சுரேஷ், கராத்தே மணி, , சத்யராஜ், ராம்கி, கார்த்திக், மு.க.முத்து பாண்டிய ராஜன், லிவிங்ஸ்டன், ரவீந்தர், சிபிராஜ், முரளி, ஒய்.ஜி.மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, விவேக், வடிவேல், கரண், ஆர்.சுந்தர் ராஜன், பவர் ஸ்டார் சீனிவாசன்,சங்கிலி முருகன், சரண் ராஜ், எஸ். பி. பாலசுப்ரமணியம், உபேந்திரா, செல்வா, உதயா என நிறையப் பேர் நடித்துள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏக்களான டி.ராஜேந்தர், ராதாரவி, எஸ்.வி.சேகர், இந்நாள் எம்.எல்.ஏ.க் களான வாகை சந்திரசேகர் மற்றும் ஆர்.கே. செல்வமணியின் மனைவியுமான ரோஜாவும், முன்னாள் மத்திய அமைச்சரான நெப்போலியனும், ராஜ்யசபா உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.சந்திரனும், இவர் இயக்கத்தில் நிறையப் படங்களில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவை உறுப்பினராக இருந்த ராமராஜன் முதலில் இவரிடம் உதவியாளராக சேர்ந்து, வசனகர்த்தாவாக உயர்ந்து, பின்னர் கதாநாயகனானவர்.
ஒரு மாதம் ஒரு படம் என்றாலும் வருடத்திற்கு 12 படங்கள் தான் வரும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் இவருடைய இயக்கத்தில் ஒரு வருடம் 13 படங்கள் வெளிவந்தன. பின்னர் இவருடைய இயக்கத்தில் விலங்குகளும் முக்கிய வேடங்களில் நடித்தன.இவருடைய படங்கள் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தைத் தரும் படங்களாகவே இருந்துள்ளன.
தமிழ் தவிரத் தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, போஜ்புரி , ஒரியா, பெங்காலி, மொழிகளில் படங்களை இயக்கியவர். மலாய் மொழியிலும் படத்தை இயக்கி உள்ளார்.
126 படங்களை பல்வேறு மொழிகளில் இயக்கி சாதனை படைத்த இவருடைய சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வைத்து, இவருக்குச் சிலை வடித்து விழா எடுத்துத் திரை உலகம் கொண்டாடி இருக்க வேண்டுமென்பது பலரது எண்ணமாக உள்ளது.

டாக்டர் கலைஞர் அவர்களின் வசன வரிகளில் நிறையப் படங்களை இயக்கினார். கலைஞர் மீது அதிகம் பற்று கொண்டவர். காரைக்குடி தொகுதியின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுச் சிறப்பாக பணிபுரிந்து கலைஞரின் இதயத்தில் இடம் பிடித்தவர். இவரிடம் உதவியாளராக இருந்த சோழ ராஜன், ராமராஜன், தியாகராஜன், புகழ்மணி, பேரரசு ஆகியோர் இயக்குனர் ஆனவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் இரண்டு முறை தலைவராக முதல்வர் கலைஞரால் நியமிக்கப்பட்டுச் சிறப்பாக பணியாற்றி கலைஞரிடம் பாராட்டு பெற்றவர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுச் சிறப்பாகச் செயலாற்றி தயாரிப்பாளர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
இவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கையில் தான் தயாரிப்பாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ காப்பீடு கொண்டு வரப்பட்டது. 60 வயதிற்கு மேற்பட்ட தயாரிப்பாளர்கள் விரும்பிக் கேட்டால் அவர்களுக்கு மாதம் தோறும் அன்புத் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசாங்கத்திடம் பேசி அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான கட்டணம் பத்தில் ஒரு பங்காகக் குறைத்து தயாரிப்பாளர்களை பயனடைய வைத்தார். பிலிம்சேம்பர் புதிய கட்டிடம் கட்டுவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்தவர். கலைஞரிடம் பேசி தயாரிப்பாளர்களுக்கும் "கலைமாமணி " விருது கிடைக்கச் செய்தார். சென்னை அருகே பையனுாரில் தயாரிப்பாளர்களுக்கு பத்து ஏக்கர் நிலத்தை அன்றைய முதல்வரான கலைஞரிடம் கேட்டு வாங்கி தயாரிப்பாளர் கவுன்சில் பெயரில் பதிவு செய்தார். தயாரிப்பாளர்களுக்காக வீட்டு வசதி கூட்டுறவுச் சங்கத்தைப் பதிவு செய்தவரும் இவர் தான்.நேரடி தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் முற்றிலும் கேளிக்கை வரி ரத்து என்ற அரசாணையை முதல்வர் கலைஞரிடம் பெற்றுத் தந்தார். கவுன்சிலுக்கு வந்த பஞ்சாயத்துகளில் உள்ள விஷயத்தை நன்கு உள்வாங்கி இரு சாராரும் கை குலுக்கி இன்முகத்துடன் ஒப்புக் கொள்ளும் தீர்ப்பாக இவரது செயல்பாடு இருக்குமாறு கடுகளவும் பிறழாமல் பார்த்துக் கொள்வார். இப்படி இவரது சாதனையை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

அரசாங்கம், சக தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கம், பிலிம்சேம்பர், பெப்சி, வினியோகஸ்தர் சங்கம், திரை அரங்கு உரிமையாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், கில்டு, மக்கள் தொடர்பாளர் சங்கம் மட்டுமல்ல வியாபார வித்தகர்களிடமும், பத்திரிகையாளர், மற்றும் ஊடகத்துறையினரிடமும். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என மற்ற மொழி திரைப்படத் தயாரிப்பாளர்களிடமும் தோழமை உணர்வுடன் பழகி, சிரித்த முகத்துடன் பணி செய்து பவனி வந்தவர் இராம நாராயணன்.

அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராய் இருந்த காலம் தமிழ்த் திரை உலகிற்கு " பொற்காலம் " என்று இன்றும் கூறுபவர்கள் உண்டு.இன்று 22.06.2020 அவரது நினைவு நாள். ஒருவரின் ஆயுள் இறப்பு வரை அல்ல மற்றவர் மனதில் வாழும் வரை என்பார்கள்.
இராமநாராயணனும் நம் மனதில் வாழ்கிறார். வாழ்வார். வாழ்ந்து கொண்டே இருப்பார்.
அவர் சாதனைகளைப் பேசுவோம்.அவரின் நினைவுகளைப் போற்றுவோம்.
இவ்வாறு தயாரிப்பாளர் விஜயமுரளி கூறியுள்ளார்.

You'r reading ராம நாராயணனுக்கு சிலை வைக்க கோரிக்கை.. 126 படம் இயக்கி கின்னஸில் இடம் பிடித்தவர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை