சொன்னதை கேட்காத எஸ்.ஏ.சி.. பேசுவதையே நிறுத்திய விஜய்!
sobha explains controversy between actor vijay and his father
நடிகர் விஜய், நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் கட்சியை பதிவு செய்தார் எனத் தகவல் பரவியது. அந்த விண்ணப்பத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி பெயர் பொதுச்செயலாளராகவும், அவரின் அம்மா ஷோபா சந்திரசேகர் பொருளாளர் என்றும் போடப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்த எஸ்.ஏ சந்திரசேகர் பேசியிருக்கிறார். அதில், ``அரசியல் கட்சியை பதிவு செய்ததுக்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க, முழுக்க என் முயற்சியே. இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று பேசினார்.
அடுத்த சில மணி நேரங்களில், ``என் தந்தை அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன். தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் ரசிகர்கள் யாரும் இணைய வேண்டாம். அந்தக் கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை" என்று அதிரடியாக அறிவித்தார் நடிகர் விஜய். சமீபகாலமாக, விஜய்க்கும் அவரது தந்தைக்கும் மோதல் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருவரும் பேசுவதை தவிர்த்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மாறி மாறி அரசியல் கட்சி தொடர்பாக பேசியுள்ளது சண்டையை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அமைந்தது.
இதற்கிடையே, இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யின் அம்மா ஷோபா பேசியுள்ளார். அதில், ``பல முறை விஜய் தனது அரசியல் குறித்து வெளியிடங்களில் பேச வேண்டாம் என அவரின் தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் எஸ்.ஏ.சி அதை கேட்கவே இல்லை. தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து எஸ்.ஏ.சி பேசி வருகிறார். இதனால் விஜய் அவரிடம் பேசுவதை தவிர்த்து வருகிறார்" என்று உண்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
You'r reading சொன்னதை கேட்காத எஸ்.ஏ.சி.. பேசுவதையே நிறுத்திய விஜய்! Originally posted on The Subeditor Tamil
More Cinema News