நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல்

by Nishanth, Dec 5, 2020, 12:41 PM IST

மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்துவதற்கு முன் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு முதலில் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பின்னர் இந்த வழக்கு எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை ஒரு பெண் நீதிபதி தலைமையிலான தனி நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இதை ஏற்ற உயர் நீதிமன்றம், ஒரு பெண் நீதிபதி தலைமையில் தனி நீதி மன்றத்தை அமைத்து உத்தரவிட்டது.

இதன்படி கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் முக்கிய சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேலும் 6 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் கேரள உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது.

இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட நடிகை சார்பிலும், கேரள அரசு தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், இரண்டு வாரங்களுக்கு மட்டும் தற்காலிகமாக விசாரணையை நிறுத்தி வைத்தது. பின்னர் விசாரணையைத் தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது. கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்தது.

விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்காது என்பதால் விசாரணை நீதிமன்றத்தைக் கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் நடிகர் திலீப் திடீரென இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடைபெறுவதற்கு முன் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு விட்டதால் நீதிமன்றத்தை மாற்றினால் அது வழக்கைப் பாதிக்கும் என்றும், உச்சநீதிமன்றம் நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்க முடியாது என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

You'r reading நடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு தாக்கல் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை