மன நிம்மதியாக இருக்கிறேன் புத்தாண்டில் ரஜினி மகிழ்ச்சி..

by Chandru, Jan 1, 2021, 18:43 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தந்து பிறந்த நாளை டிசம்பர் 12ம் தேதி சென்னையில் கொண்டாடி விட்டு மறுநாள் தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென்று படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அடுத்த நாள் அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 3 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்தார்.

ரஜினிகாந்த் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு முன் அளித்த பேட்டியில் டிசம்பர் 31ம் தேதி புதிய கட்சி தொடங்குவதற்கான தேதி அறிவிக்க உள்ளதாகவும், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என்றும் அறிவித்தார். ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். ஆனாலும் சிலர் அவரை விமர்சனம் செய்தனர். யாரோ தரும் அழுத்தம் காரணமாக ரஜினி கட்சி தொடங்குவதாக பேசினார்கள். 31ம் தேதி நெருங்க நெருங்க ரஜினிக்கு டென்ஷன் அதிகரித்தது. இதனால் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டது. அதற்காகத்தான் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ரஜினியின் உடல் நிலைக்கு அவர் கொரோனா சூழலில் பயணம் செய்யக்கூடாது என்றும், படுக்கையில் ஒரு வாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

இந்நிலையில் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கட்சி தொடங்கவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள். நான் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து அதிர்ச்சி அளித்தார். ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்தாலும் தொடங்கவில்லை என்று அறிவித்தாலும் அவரைப்பற்றி விவாதங்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன. டிவி பேட்டிகளில் ரஜினி யாருக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்று விவாதம் நடக்கிறது. அதே சமயம் முக்கிய கட்சிகள் ரஜினி தங்கள் கட்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்று கூறி வருகின்றனர். இதற்கிடையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் விரைவில் ரஜினியை நேரில் சந்திப்பேன் அவரது உடல் நலம் விசாரித்து தனக்கு ஆதரவு தருமாறு கேட்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ரஜினிகாந்த் முழு ஓய்வில் இருக்கிறார். புத்தாண்டு தினத்தில் அவர், தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவுக்கு நன்றி தெரிவித்திருப்பதுடன் தற்போது மனநிம்மதியாக இருப்பதாக கூறி வீடியோ வெளியாகி பரபரப்பாக வலம் வந்துக்கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில், அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவர்கள் நர்ஸ்கள் ஆகிய அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் தற்போது நல்ல உடல் நிலையில் இருக்கிறேன். நல்ல மன நிம்மதியுடனும் இருக்கின்றேன். அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர். அனைத்து வசதிகளும் நன்றாக உள்ளது. அனைவருக்கும் நன்றி என தெரிவித்திருக்கிறார்.

You'r reading மன நிம்மதியாக இருக்கிறேன் புத்தாண்டில் ரஜினி மகிழ்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை