தியேட்டரில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதிக்கு எதிர்ப்பு.. நடிகரை தொடர்ந்து டாக்டர் சங்கம் குரல்

by Chandru, Jan 6, 2021, 14:39 PM IST

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். தியேட்டர்கள் மூடப்பட்டத்தால் 2 ஆயிரம் கோடி நஸ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதையடுத்து மருத்துவ குழுவுடன் அரசு ஆலோசனை நடத்தியபபிறகு கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. 50 சதவீத அனுமதி என்றதால் மாஸ்டர் போன்ற படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. 100 சதவீத அனுமதி கேட்டு தியேட்டர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. நடிகர் விஜய் தமிழக முதல் வரை நேரில் சந்தித்து இதற்கு அனுமதி கேட்டார். நடிகை குஷ்பு, நடிகர் சிம்பு போன்றவர்களும் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பொங்கல் முதல் 100 சதவீத டிக்கெட் அனுமதியை அரசு வழங்கியது.

அதற்கு நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் 13ம் தேதி வெளியாகிறது அன்று முதல் 100 சதவீதம் டிக்கெட்டுடன் படங்கள் வெளியாகிறது மறுநாள் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் 100 சதவீத அனுமதியைவிட 50, சதவீத அனுமதியே மேல் என்று நடிகர் அரவிந்த்சாமி நேற்று கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது டாக்டர்கள் சங்கம் ஒன்று 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது நெட்டில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி ஆர். ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெள்யிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: திரைத்துறையினரின் அழுத்தத்தால், தமிழக அரசு திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவும் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் , 70 விழுக்காடு வேகமாக பரவும் புதிய உருமாறிய கொரோனா பரவும் காலக்கட்டத்தில் இத்தகைய அனுமதி கொடுத்திருப்பது பொது மக்களின் நலன்களுக்கு எதிரானது. இது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். தனிநபர் இடைவெளியை பரமாரிக்க வேண்டும், கூட்டம் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும், மூடிய காற்றோட்டம் இல்லாத இடங்களை தவிர்க்க வேண்டும் என உலக நல நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் இதை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுமக்களின் உயிரைவிட திரைப்படத் தயாரிப்பாளர்களின் பொருளாதார நலனை முக்கியமானதாக தமிழக அரசு கருதுவது வியப்பைத் தருகிறது. கடந்த எட்டு மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்திடவும், கொரோனா பரவலை தடுத்திடவும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர்.

பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளனர். பலர் உயிரையும் தியாகம் செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவும் வகையில் அரசு செயல்படுவது, மருத்துவப் பணியாளர்களையும், முன்களப் பணியாளர்களையும் இழிவு படுத்தும் செயலாகும். கொரோனாவால் பொருளாதார பாதிப்புக்கு உள்ளான திரைத்துறையினருக்கு இழப்பீடு வழங்கலாமே ஒழிய, அவர்கள் நலன் காத்தல் என்ற பெயரில் கொரோனாவை பரப்ப வழி வகுத்தல் சரியல்ல. அறிவார்ந்த செயலாகாது. எனவே,தமிழக அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். திரைத்துறையினரும் சமூகப் பொறுப்போடு செயல்பட வேண்டும். தங்களது ரசிகர்களும், அவர்களின் குடும்பங்களும் கொரோனாவால் பாதிக்காமல் காக்கும் கடமை முன்னணி திரை நட்சத்திரங்களுக்கும், கலைஞர்களுக்கும் உள்ளது. அக்கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You'r reading தியேட்டரில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதிக்கு எதிர்ப்பு.. நடிகரை தொடர்ந்து டாக்டர் சங்கம் குரல் Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை