சினிமா தியேட்டரில் 50 சதவீதம் அனுமதி.. பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..

by Chandru, Jan 8, 2021, 15:49 PM IST

கொரோனா வைரஸ் லாக்டவுனால் 8 மாதமாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகின. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மருத்துவக் குழுவுடன் அரசு ஆலோசனை நடத்திய பிறகு கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. 50 சதவீத அனுமதி என்றதால் மாஸ்டர் போன்ற படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து 100 சதவீத அனுமதி கேட்டு தியேட்டர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது, நடிகர் விஜய் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து இதற்கு அனுமதி கேட்டார். நடிகை குஷ்பு, நடிகர் சிம்பு போன்றவர்களும் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பொங்கல் முதல் 100 சதவீத டிக்கெட் அனுமதியை அரசு வழங்கியது. அதற்கு நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் 13ம் தேதி வெளியாகிறது அன்று முதல் 100 சதவீதம் டிக்கெட்டுடன் படங்கள் வெளியாகிறது மறுநாள் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் திரைக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்குகிறது. ஆன்லைனில் டிக்கெட் பதிவு நடக்கிறது. ஆனால் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. 100 சதவீத அனுமதியைவிட 50, சதவீத அனுமதியே மேல் என்று நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்தார். அடுத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி ஆர். ரவீந்திரநாத் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியதாவது:திரைத் துறையினரின் அழுத்தத்தால் , தமிழக அரசு திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கியுள்ளது.கொரோனா பரவும் ஆபத்தைக் கருத்தில் கொள்ளாமல் , 70 விழுக்காடு வேகமாகப் பரவும் புதிய உருமாறிய கொரோனா பரவும் காலக் கட்டத்தில் இத்தகைய அனுமதி கொடுத்திருப்பது பொது மக்களின் நலன்களுக்கு எதிரானது. இது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும்.

தனிநபர் இடைவெளியை பராமரிக்க வேண்டும், கூட்டம் உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும், மூடிய காற்றோட்டம் இல்லாத இடங்களைத் தவிர்க்க வேண்டும் என உலக நல நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் இதை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.பொதுமக்களின் உயிரைவிடத் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பொருளாதார நலனை முக்கியமானதாகத் தமிழக அரசு கருதுவது வியப்பைத் தருகிறது. கடந்த எட்டு மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் குணப்படுத்திடவும், கொரோனா பரவலை தடுத்திடவும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர்.பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளனர். பலர் உயிரையும் தியாகம் செய்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவும் வகையில் அரசு செயல்படுவது, மருத்துவ பணியாளர்களையும், முன்களப் பணியாளர்களையும் இழிவுபடுத்தும் செயலாகும்.கொரோனாவால் பொருளாதார பாதிப்புக்கு உள்ளான திரைத் துறையினருக்கு இழப்பீடு வழங்கலாமே ஒழிய, அவர்கள் நலன் காத்தல் என்ற பெயரில் கொரோனாவை பரப்ப வழி வகுத்தல் சரியல்ல. அறிவார்ந்த செயலாகாது.எனவே,தமிழக அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். திரைத் துறையினரும் சமூகப் பொறுப்போடு செயல்பட வேண்டும்.தங்களது ரசிகர்களும், அவர்களின் குடும்பங்களும் கொரோனாவால் பாதிக்காமல் காக்கும் கடமை முன்னணி திரை நட்சத்திரங்களுக்கும், கலைஞர்களுக்கும் உள்ளது.அக்கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா விதிமுறைகளை ஜனவரி 31ம் தேதி வரை கடைப் பிடிக்க வேண்டும் என்று மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் 100 சதவீத டிக்கெட் அனுமதி ரத்து செய்யப்படுமா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சென்னை வந்த பிறகே இதுபற்றி முடிவு தெரியும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், 100 சதவீத டிக்கெட் அனுமதி என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.அதில், 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்படலாம் என்பது பேரிடர் விதிக்கு எதிரானது. 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவக் குழு அனுமதி தரவில்லை. எனவே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கத் தடை விதிக்க வேண்டும் கோரி உள்ளனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஸ், ஆனந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 11-ந் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சரியான முறையில் பரிசீலித்து முடிவெடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்த நீதிபதிகள், 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் சூழலில் திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்துவது பற்றியும் தகவல் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளன.

மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் 100 சதவீத இருக்கை அனுமதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், கொரோனா தடுப்பூசி வரும் வரை கொரோனா பரவல் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மதுரை கோர்ட்டில் இதே போன்ற வழக்கில் 50 சதவீத டிக்கெட் அனுமதிக்கு உத்தரவிட்டிருக்கிறது இந்த உத்தரவை இணைக்கப்படுகிறது என உத்தரவிடப்பட்டுள்ளது.

You'r reading சினிமா தியேட்டரில் 50 சதவீதம் அனுமதி.. பதில் அளிக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை