விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்..

by Chandru, Jan 15, 2021, 17:44 PM IST

விவசாய வேளாண் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியதிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. வேளாண்மை சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் பஞ்சாப், அரியான விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு போராட்டம் நடந்து வருகின்றனர். அவர்களிடம் மத்திய அரசு நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்தன. சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் பூமி படமும் விவசாயிகளின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகாரத்துக்கு அடிபணிந்து இந்தியாவில் எப்படி விவசாயம் நசுக்கப்படுகிறது என்பதை இக்கதை பட்டவர்த்தனமாக தோலுரித்து காட்டி இருக்கிறது. வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் கோலா தொழிற் சாலை, உர நிறுவனம், கார் நிறுவனங்களை இந்தியாவில் பல விவசாய பகுதிகளில் வைத்து நடத்துகிறது. அதற்காகப் பல லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் உரிஞ்சி எடுக்கப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடிக் கருகுகிறது. பின்னர் நிலம் மலடாகி விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது என்ற கருத்தைப் பூமி படம் சொல்கிறது. அப்படிப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து ஜெயம் ரவி போராடுவதே கதை.

இந்நிலையில் பிரபல குணசித்ர நடிகர் ராஜ்கிரண் பொங்கல் தினத்தில் ஒரு வாழ்த்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில், நாம் விழித்துக்கொள்ள வேண்டிய
கடைசி நேரக் கட்டாயத்தில் இருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பொங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:நம் இந்திய நாடு, விவசாயப்பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்டது. சுதந்திரத்துக்குப்பின்,நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின்தவறான கொள்கை முடிவுகளால்,மீண்டும், அந்நிய கார்ப்பரேட்டுகள்,பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்ற பெயர்களால், மிகவும் தந்திரத்துடன்,உரம், பூச்சிக்கொல்லி,வீரிய கலப்பினம் என்ற பெயர்களில் விஷத்தை நம் கைகளாலேயே போட வைத்து, நம் செல்வங்களைக் கொள்ளையடித்ததோடு,நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்..அதன் காரணமாக, இன்று நம் விவசாயப்பெருமக்கள்,வாழ வழி தெரியாமல் தவிப்பதோடு,தற்கொலையும் பண்ணிக்கொள்கிறார்கள்...விவசாயத்தொழிலைஆதாரமாக வைத்து இயங்கிய சிறு, குறு வணிகப்பெருமக்களும் வழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர்.

இது போக, விவசாயம் பொய்த்துப்போனால், விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு
விலைக்கு வாங்கி, நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும்,கனிம வளங்களை,
அரசியல்வாதிகளின் துணையோடு கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள்
முயன்று கொண்டிருக்கின்றனர்...நாம் விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி நேரக் கட்டாயத்தில் இருக்கிறோம்.நம்மாழ்வார் ஐயா அவர்கள்,காட்டிச்சென்ற வழியைப்பின்பற்றி,இயற்கை விவசாயத்துக்கு மாறி,நம் மண்ணை உயிர்ப்பித்து, பயிர் செய்து, மதிப்புக்கூட்டு முறையில் வருமானத்தைப்பெருக்கி,விவசாய பெருமக்கள் தலை நிமிர்ந்து மகிழ்ச்சியோடு வாழ,எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வொரு அடி, மண்ணும்,அதனுள் இருக்கும் கனிம வளங்களும்,நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்... அவற்றை நம் சந்ததியினருக்காகப் பேணிப்பாதுகாக்க,இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். இது நெட்டில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

You'r reading விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி கட்டத்தில் இருக்கிறோம் .. ராஜ்கிரண் திடீர் ஆவேசம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை