பட்டாகத்தியில் கேக் வெட்டிய பிரபல நடிகர் திடீர் சர்ச்சையில் சிக்கி விளக்கம்..

by Chandru, Jan 16, 2021, 16:46 PM IST

பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சில சமயம் பிரச்சனைக்குள்ளாகி விடுகிறது. ரவுடிகள் சிலர் தங்களின் பிறந்த நாளின் போது பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வுகள் போலீஸ் புகார், கைது வரை சென்றது. சில கொண்டாட்டங்களில் மதுவிருந்து தரப்பட்டு ரகளையாகி போலீஸ் வழக்காகி விடுகிறது. இதுபோன்ற பிரச்சனையில் தற்போது பிரபல நடிகர் சிக்கி இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடினார் விஜய் சேதுபதி.

அப்போது பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டினார். அந்த படங்கள் நெட்டில் வெளியானது அதைக்கண்டு சிலர் சர்ச்சை கிளப்பினார்கள். பட்டாக்கத்தியில் கேக் வெட்டி தவறான முன்னுதாரணம் ஏற்படுத்தி இருக்கும் விஜய் சேதுபதியை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று சிலர் நெட்டில் பகிர்ந்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது:எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல் படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.இவ்வாறு விஜய் சேதுபதி கூறி உள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது சர்ச்சையானது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டவர் முத்தையா முரளிதரன் அவரது வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று தமிழ் ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவிக்காமல் மவுனம் காத்தார். போராட்டம் வலுத்ததும் முத்தையா முரளிதரனே விஜய் சேதுபதியைத் தனது படத்திலிருந்து விலகும் படி கேட்டுக்கொண்டார். அதையேற்று நன்றி வணக்கம் சொல்லி அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகினார். இந்த சர்ச்சை முடிந்து ஒரு சில மாத இடைவெளியில் பட்டாக் கத்தியில் கேக் வெட்டி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

You'r reading பட்டாகத்தியில் கேக் வெட்டிய பிரபல நடிகர் திடீர் சர்ச்சையில் சிக்கி விளக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை