ஜல்லிக்கட்டு வீரர் நினைவாக லாரன்ஸ் தரும் தங்க பதக்கம்..

by Chandru, Jan 18, 2021, 11:18 AM IST

நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா எனத் திகில் படங்களை இயக்கியும் நடித்து அசத்தினார். இவர் இயக்கிய காஞ்சனா படம் இந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் இந்தியில் ரிமேக் ஆனது.அப்படத்தையும் லாரன்ஸே இயக்கினார். ஒடிடியில் இப்படம் லஷ்மி என்ற பெயர் மாற்றத்துடன் வெளியானது. இதில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்தனர். ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி 2ம் பாகத்தை பி.வாசு இயக்குகிறார். இப்படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதன் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. படம் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சென்ற மாதம் ருத்ரன் என்ற படத்தில் லாரன்ஸ் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். ஆனால் படத்தை இயக்குவது யார் என்று அப்போது அறிவிப்பு வெளியாகவில்லை. அந்த படத்தைத் தயாரிப்பாளர் கதிரேசனே இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடு களம் ஆகிய படங்களையும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா போன்ற படங் களை தயாரித்தவர்.

லாரன்ஸ் சினிமாவில் கவனம் செலுத்தும் நிலையில் அடுத்த கட்டமாக அவரது குருவான ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அதில் அவருடன் இணைய திட்டமிட்டிருந்தார்.கடந்த டிசம்பர் மாதம் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக ரஜினி அறிவித்தவுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய லாரன்ஸ் அவருக்கு வாழ்த்து பகிர்ந்திருந்தார். ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் ரஜினியை பற்றி யாராவது விமர்சனம் செய்தால் அவர்களுக்கு பதிலடியும் தந்து வருகிறார். ரஜினி கட்சி தொடங்கியதும் அந்த கட்சியில் லாரன்ஸ் இணைவார் என்றும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அண்ணாத்தே படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றார். சில நாட்கள் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்த நிலையில் திடீரென்று படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப் பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். திடீரென்று அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் லாரன்சும் அதிர்ச்சி அடைந்தார். ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி ரசிகர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினார்கள். அதில் லாரன்ஸை கலந்துகொள்ளக் கேட்டனர். அவர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து லாரன்ஸ் கூறும் போது,ரஜினிசார் வேறு ஏதாவது காரணம் சொல்லி அரசியலுக்கு வர மறுத்திருந்தால் அவரை வற்புறுத்தலாம் ஆனால் அவர் உடல்நிலையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடன் நெருக்கமாகப் பழகியவன் என்ற முறையில் அவர் உடல்நிலைபற்றி எனக்கு தெரியும். அவரை வற்புறுத்தி அரசியலுக்கு வரவழைத்து அவருக்கு எதாவது நேர்ந்தால் அதைத் தங்கிக்கொள்ள முடி யாது எனத் தெரிவித்தார்.
லாரன்ஸ் தற்போது பொங்கல் திருநாளையொட்டி நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் தனது பங்களிப்பைச் செலுத்தி உள்ளார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது:தமிழனின் வீர அடையாளமான இந்த ஜல்லிக்கட்டு காட்சிகளைப் பார்க்கும் பொழுது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக உணர்வுரீதியாக போராடியதையும், பல அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாகப் போராடி வெற்றி பெற்றதையும், இந்த மாபெரும் நிகழ்வில் என்னுடைய சிறு பங்கு இருந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன். போராட்டத்தின்போது ரயில் மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்தின் விருப்பத்திற்காக ஒரு மகன் என்ற நிலையில் இருந்து ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன். அதோடு இல்லாமல் யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனி வரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் இனி மேல் ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்கக் காசுகளைப் பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு லாரன்ஸ் கூறி உள்ளார்.

You'r reading ஜல்லிக்கட்டு வீரர் நினைவாக லாரன்ஸ் தரும் தங்க பதக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை