சிரித்தபடி சாமியாடிய பெண் இயக்குனர்.. நடிகர் சமுத்திரக்கனி தகவல்..

by Chandru, Feb 2, 2021, 10:51 AM IST

பூவரசம் பீப்பீ, சில்லுகருப்பட்டி வெற்றிப் படங்களை இயக்கிய ஹலீதா சமீம் அடுத்து இயக்கி உள்ள படம் ஏலே. சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.ஒய் நாட் ஸ்டுடியோஸ் (Y Not Studios) நிறுவனமும் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Reliance Entertainment) நிறுவனமும் இணைந்து வழங்குகிறது. எஸ்.சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தை இணை தயாரிப்பு செய்துள்ளார் சக்ரவர்த்தி ராமச்சந்திரா. படைப்பாளிகள் புஷ்கர் & காயத்திரி ( விக்ரம் வேதா புகழ் ) Wallwatcher Films சார்பில் முதல் படைப்பாக இப்படத்தினை கிரியேட்டிவ் புரடக்சன் செய்துள்ளனர்.
இசை காபெர் வாசுகி, அருள் தேவ். ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர். கலை இயக்கம் வினோத் ராஜ்குமார். படத்தொகுப்பு ரேமண்ட் டெரிக் கிரஸ்டா, ஹலிதா சமீம்,சண்டைப்பயிற்சி சூப்பர் சுப்பராயன் வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் சமுத்திரக்கனி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:ஏலே கதையை ஹலிதா 9 வருடத்துக்கு முன் என்னிடம் சொன்னார். பிறகு 3 வருடத்துக்கு முன்பு சொன்னார். மீண்டும் என்னை அணுகி ஏலே படம் தயாராக உள்ளது. புஷ்கர் காயத்ரி,ஒய்நாட், ரிலையன்ஸ் போன்றவர்கள் இணைந்து தயாரிக்கின்றனர். நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். நடிப்பது என்பது முடிவாகிவிட்டதால் மீண்டும் ஏலே கதையைச் சொல்லச் சொன்னேன். எதார்த்தமான கதை. ஹலிதா எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்.

ஆனால் படப்பிடிப்பில் அவர் வேறுமாதிரி இருப்பார். ஒரு இடத்தில் நிற்கமாட்டார். பிடிவாதம் அதிகம் இந்த காட்சி வேண்டும் என்றால் அதை எடுத்தே தீர்வார். அங்கு ஒரு இயக்குனராக சாமி ஆடுவார். அதுவும் சிரித்தபடி சாமி ஆடிவிடுவார். நான் பள்ளிக்கூட பெண்ணாகச் சிறுமியாகப் பார்த்த ஹலிதா இன்றைக்கு இப்படி வளர்ந்து நிற்கிறார். ஆனால் இதுவல்ல அவரது உயரம் இன்னும் பெரிய இடத்துக்கு வருவார்.ஏலே படப்பிடிப்புக்கு முதல் நாள் சென்றபோது என்னைப் பிணமாக நடிக்கவைத்தார்கள். முதல் காட்சியிலேயே பிணமாகவா என்று எண்ணினேன். நான் கண்ணை மூடி படுத்துக்கொள்வேன். என்னைச் சுற்றி ஊர்க்காரர்கள் அமர்ந்து அழுவார்கள். அம்மாவாக நடித்த ஒருவரின் மகன் கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் இறந்திருக்கிறார். அவர் தன் மகன் இழப்பை நினைத்து என்னை நெஞ்சில் அடித்து அடித்து அழுதார். நான் கண் விழித்து அவரை சமாதானம் செய்தேன். இதில் என் மகனாக நடித்திருக்கும் மணிகண்டன் நல்ல நடிப்பு திறமை கொண்டவர். பாடல்களும் நன்றாக வந்திருக்கிறது. இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.இவ்வாறு சமுத்திரகனி கூறினார்.

இயக்குனர் ஹலிதா சமீம் பேசும்போது, ஏலே தான் நான் முதலில் இயக்குவதற்காக எழுதிய ஸ்கிர்ப்ட். ஆனால் பூவராம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி இயக்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏலே படத்தின் கதையை புஷ்கர் காயத்ரியிடம் கூறி இருந்தேன் அவர்கள் தயாரிப்பதாகக் கூறி இருந்தார்கள் அது இப்போது நடந்திருக்கிறது. சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி உள்ளிட்ட எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இசையும் பாடல்களும் பொருத்தாக அமைந்தது. ஏற்கனவே இந்த படத்தை நான் எடிட் செய்திருந்தேன். மேலும் 20 நிமிடம் குறைக்க ரேமண்ட்டிடம் கொடுத்தேன். அவர் அதனை நன்றாகவே செய்து முடித்தார் என்றார்.
நிகழ்ச்சியில் படத்தில் நடித்தவர், பணியாற்றியவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

You'r reading சிரித்தபடி சாமியாடிய பெண் இயக்குனர்.. நடிகர் சமுத்திரக்கனி தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை