யு-டர்ன் தாராளமா (டிக்கெட்) எடுக்கலாம் !

by Mari S, Sep 14, 2018, 12:32 PM IST

விநாயகர் சதுர்த்தியான நேற்று, சமந்தாவின் நடிப்பில், சீமராஜா, யு-டர்ன் என 2 படங்கள் ரிலீசாகின. சீமராஜா படத்தில், வழக்கமான ஹீரோயினாக வந்த சமந்தாவிற்கு நடிக்க பெரிய அளவில் ஸ்பேஸ் இல்லை. அந்த குறையை கொஞ்சம் கூட குறை வைக்காமல் யு-டர்ன் படத்தில் நடித்து தள்ளியுள்ளார் சமந்தா. ” நான் எதையுமே பண்ணல சார்..” என்ற வசனத்தை சமந்தா கூறும் போதெல்லாம் தியேட்டர்களில் கிளாப்ஸ் சத்தம் பறக்கிறது.

படக்குழு:

சமந்தா அக்கினேனி, ஆதி பினி செட்டி, ராகுல் ரவீந்திரன், நரேன், "ஆடுகளம்" நரேன், பூமிகா சாவ்லா... உள்ளிட்டோர் நடிக்க, பவண்குமார் இயக்கத்தில், ஸ்ரீனிவாச சித்தூரி, ராம்பாபு பண்டாரு... தயாரிப்பில், கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் & டிஸ்டிபியூட்டர்ஸ் கோ.தனஞ்செயன் வெளியீடு செய்ய க்ரைம், த்ரில்லர் & ஹாரர் படமாக வெளிவந்திருக்கும் படம் தான் "யுடர்ன் ( U Turn)".

படத்தின் கதை:

வேளாச்சேரி பாலத்தில் சட்டத்திற்கு புறம்பாக, சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி வைத்துவிட்டு "யு டர்ன்" எடுப்பவர்களால் ஏகப்பட்ட விபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளில் ஏகப்பட்டோர் உயிர் இழக்க, அது பற்றி பிரபல ஆங்கில பத்திரிகையில் புதிய நிருபராக பணியில் சேர்ந்திருக்கும் சமந்தா, ஒரு கட்டுரை எழுத ஆய்வில் இறங்குகிறார். இந்நிலையில், சென்டர் மீடியன் கற்களை நகர்த்தி விட்டு தினமும் "யுடர்ன்" போடும் பத்துக்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மர்மமாக மரணமடைகின்றனர்.

அவர்களது மரணத்திற்கு எல்லாம் காரணம், சமந்தா தான் என சந்தேகிக்கும் "ஆடுகளம்" நரேன் தலைமையிலான போலீஸ் அவரையும், அவருக்கு உதவுபவர்களையும் அழைத்துப் போய் விசாரிக்கிறது. ஆனால், அந்த போலீஸ் டீமில் இருக்கும் ஆதி மட்டும் சமந்தா குற்றமற்றவர் என தீர்மானமாக நம்பி அவருக்கு உதவுகிறார். சமந்தா குற்றமற்றவரா? தொடர் கொலைகளுக்கு காரணம் யார்..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது "யுடர்ன் ( U Turn)".

சமூக அக்கறையுடன் கூடிய பரபரப்பு கட்டுரைகளுக்கு அலையும் ஆங்கில தினசரியின் இளம் பெண் நிருபராக, கதையின் நாயகியாக. சமந்தா அக்கினேனி, அதாங்க நம்ம சமந்தா பொண்ணு செம சமத்தாக, சதா சர்வ நேரமும் முகத்தில் கலவரத்துடனும், உடம்பு முழுக்க தனக்கே உரிய கவர்ச்சியுடனும் படத்திற்கும் தான் ஏற்று நடித்திருக்கும் பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். வாவ்!

சமந்தாவுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக "மிருகம்" ஆதி பினிசெட்டி, மிரட்டியிருக்கிறார். சமந்தாவின் ஆரம்ப நிலை காதலராக அவர் வேலை பார்க்கும் அதே பத்திரிகையில் சீனியர் க்ரைம் நிருபராக வேலை பார்க்கும் ராகுல் ரவீந்திரன், ஹாசம்.

தன் குடும்பம் விபத்தில் பலியாகதானே காரணமான நரேன், வழக்கை எப்பேற்பட்ட வழக்கையும், எப்படியாவது முடித்து வைக்க முயலும் போலீஸ் அதிகாரியாக "ஆடுகளம்" நரேன், மகளை அநியாயமாக விபத்தில் இழந்த பூமிகா சாவ்லா... உள்ளிட்ட எல்லோரும் கனமான பாத்திரங்களில் கவனமாக நடித்து, அசத்தியுள்ளனர்.

கவின் பாலாவின் வசனவரிகள், சுரேஷ் ஆறுமுகத்தின் பின் பாதி ஷார்ப் - படத்தொகுப்பு, நிக்கேத் பொம்மி ரெட்டியின் அழகிய கதைக்கு தேவையான லைட்டிங்குடன் கூடிய ஒளிப்பதிவு, பூர்ண சந்திர தேஜஸ்வியின் மிரட்டல் இசை... உள்ளிட்டவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.

பவண்குமார் இயக்கத்தில், முதல் பாதி கொஞ்சம் இழுவையாக தெரிந்தாலும், இரண்டாம் பாதி, கதையிலும் எதிர்பாராத எக்கச்சக்க "யுடர்ன் ( U Turn)"களுடன், க்ரைம், த்ரில்லர், ஹாரர் ரசிகர்களை செமயாக கவரும் படி படமாக்கப்பட்டு ரசிகர்களை சீட்டோடு கட்டிப்போட்டு விடுகிறது என்பது பெரிய ப்ளஸ்!

சீமராஜாவுடனான ரேஸில் யுடர்ன் பாஸாகி ஃபர்ஸ்ட்மார்க் எடுத்துள்ளது!

யுடர்ன் ரேட்டிங்: 3.75/5

You'r reading யு-டர்ன் தாராளமா (டிக்கெட்) எடுக்கலாம் ! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை