அணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்னிடம் பலிக்காது விராட் கோஹ்லி காட்டம்

by Nishanth, Feb 10, 2021, 11:03 AM IST

ரகானேவின் மோசமான ஆட்டம், குல்தீப் யாதவை அணியில் சேர்க்காதது ஆகியவை குறித்து கேட்டு அணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்னிடம் பலிக்காது என்று நேற்று சென்னை டெஸ்டில் கிடைத்த படுதோல்விக்கு பின்னர் நிருபர்களிடம் பேசும் போது இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறினார். ஆஸ்திரேலிய தொடரில் கிடைத்த சரித்திர வெற்றியால் ஏற்பட்ட மகிழ்ச்சி அடங்குவதற்குள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நடந்தது. சென்னை டெஸ்டில் இங்கிலாந்து அணியிடம் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து விராட் கோஹ்லியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி விட்டு ரகானேவை கேப்டனாக்க வேண்டும் என்று கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

சென்னை டெஸ்டில் ரகானே சிறப்பாக ஆடவில்லை. அவர் முதல் இன்னிங்சில் 1 ரன்னிலும், இரண்டாவது இன்னிங்சில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். இதேபோல இந்த டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை அணியில் சேர்க்காததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று போட்டி முடிந்த பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, இந்த விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேப்டன் விராட் கோஹ்லியிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியது: ரகானேவின் மோசமான பேட்டிங் மற்றும் குல்தீப் யாதவை அணியில் சேர்க்காதது ஆகியவை குறித்து கேட்டு, அதுதொடர்பாக என்னிடம் இருந்து கிடைக்கும் பதில்களை வைத்து அணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்னிடம் பலிக்காது. குல்தீப் யாதவை அணியில் சேர்க்காதது குறித்து நான் வருத்தப்படவில்லை.

இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை எடுக்கும் போது வித்தியாசமான முறையில் பந்து வீசுபவர்களைத் தான் தேர்வு செய்ய வேண்டும். தற்போது அணியில் உள்ள இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்தும் எந்த சந்தேகமும் கிடையாது. ரகானே இந்திய அணியின் ஒரு மிக முக்கிய வீரர் ஆவார். தற்போது அவர் நன்றாக ஆடாவிட்டாலும், விரைவில் அவரது ஆட்டத் திறன் மீண்டும் வெளிப்படும். புஜாராவைப் போலவே ரகானேவும் அணிக்கு மிகவும் தேவையான வீரர்களில் ஒருவர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் தொடர்ந்து அணியில் இருப்பார். ரகானேவின் திறமையில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் திறன் அவருக்கு உண்டு. அணிக்கு தேவையாக இருந்த முக்கிய கட்டத்தில் தான் அவர் மெல்பர்னில் சதம் அடித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading அணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்னிடம் பலிக்காது விராட் கோஹ்லி காட்டம் Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை