சிறுநீரகம் மற்றும் இதயத்தை பாதுகாக்கும் காய் எது தெரியுமா?

benefits of turkey berry

by SAM ASIR, Oct 2, 2020, 13:34 PM IST

மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது சுண்டைக்காய். சுண்டையின் வகைகளில், மலைச்சுண்டை அதிகக் கசப்புச் சுவை கொண்டது. பால் சுண்டை, காட்டுச் சுண்டை, நஞ்சுச் சுண்டை, குத்துச் சுண்டை போன்ற வகைகளும் உண்டு. பால் சுண்டைக்குக் கசப்புத் தன்மை சிறிது குறைவு.

சுண்டையின் தாவரவியல் பெயர் சொலானம் டார்வம் என்பதாகும். ரூடின், கேம்ஃபெரால், குவர்செடின், சொலாஜெனின், டார்வனால், டார்வோசைட் போன்ற வேதிப் பொருள்கள் சுண்டைக்காயில் உள்ளன. நார்ச்சத்து, புரதம், இரும்புச் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தனிமங்களும் சுண்டையில் அதிகம்.

சுண்டைக்காய் ஆங்கிலத்தில் Turkey berry என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இது துருக்கியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆனாலும் கூட இயல்பாகவே அமெரிக்காவின் புளோரிடா ஆகிய பகுதிகளில் எல்லாம் நெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கிறது.

செரிமானத்துக்கு நல்லது

உலர்ந்த சுண்டைக் காய்களைப் பிளந்து, உப்பு சேர்த்து தயிரில் கலந்து வெயிலில் காய வைத்து, நன்கு உலர்த்தி வற்றலாகச் செய்துகொள்ளலாம். உப்பில் வைப்பதைவிட மோரில் ஊற வைத்து எடுத்துக் கொள்வதுதான் நன்மையை பயக்கும். மோரிலும், தயிரிலும் ப்ரோபயாட்டிக் என்ற உணவுப்பொருள் இருக்கிறது. அது சுண்டை வற்றல் சேர்த்து சாப்பிடுகிறபோது செரிமானப் பாதையின் கோளாறுகளை நீக்குவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம், சுவையின்மை போன்ற செரியாமை சார்ந்த அறிகுறிகளைக் குணப்படுத்தும் தன்மை சுண்டை வற்றலுக்கு உண்டு.

பால் சுண்டைக்காய் என்று சொல்லப்படுகிற மெல்லிய சுண்டைக்காயை மோரில் ஊற வைத்து வெயிலில் வைத்து எடுத்துக் கொள்கிறபோதுதான் அதனை சுண்டை வற்றல் என்று சொல்கிறோம்.

வயிற்றுப்புண்

சுண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுகுடலுக்கு நல்லது. வாய்வு தொல்லை, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் புண் ஆகியவற்றை இது தவிர்க்கும். குடல் பகுதிகளில் இருக்கும் கிருமிகளை அழித்து, செரிமானப் பாதையைப் பாதுகாக்கும் மூலிகைக் காவலன் சுண்டைக்காய். சுண்டைக்காயிலுள்ள டார்வனால், டார்வோசைட் போன்ற தாவர வேதிப்பொருள்கள், சில வகையான கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட உதவுகின்றன. நம்முடைய இரைப்பையில் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலத்தால் ஏற்படக்கூடிய புண்களை ஆற்றக்கூடிய தன்மை சுண்டை வற்றலுக்கு இருக்கிறது. சுண்டைக்காய் வயிற்று புழுக்களை அழித்து, செரிமானப் பகுதியைச் சுத்தம் செய்யும். சாதாரணமாக குடல் புண்களை ஆற்றக்கூடிய தன்மையும் சுண்டை வற்றலுக்கு உண்டு.

வயிறு கழிவதை கட்டுக்குள் வைக்க சுண்டை வற்றலைப் பொடியாக்கி, மோரில் கலந்து சாப்பிடலாம். வயிற்று மந்தத்தை போக்கவும் இது உதவுகிறது. சுண்டை வற்றல் சூரணம் எனும் சித்த மருந்து, குடல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்த உதவும்.

சுவாச மண்டலமும் சுண்டையும்

உடலில் உள்ள உறுப்புகளில் ஏற்படுகிற அழற்சி வீக்கத்தையும், சுவாசப்பாதையில் ஏற்படுகிற அடைப்பு வீக்கத்தைக் கரைக்கக் கூடிய தன்மையும் சுண்டை வற்றலில் இருக்கிறது. உடலில் சுவாசப் பாதையில் அடிக்கடி ஒவ்வாமை ஏற்படுவதும் செரிமான பாதையில் ஒவ்வாமை ஏற்படுவதன் காரணமாக சிலருக்கு அடிக்கடி சுவாச நோய்கள் செரிமான நோய்கள் வரலாம். அத்தகைய நோய்களை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை ஒரு சீராக வைத்துக் கொள்கிற தன்மை சுண்டை வற்றலில் இருக்கிறது.

இரத்த போஷாக்கு

சுண்டைக்காய் இரத்த சோகையை நீக்கும். இரத்தக்கொதிப்பை குறைப்பதற்கும் சுண்டை வற்றல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இரத்தத்தை ஊற வைக்கும் தன்மை சுண்டைக்காய்க்கு இருக்கிறது. இரத்த உறைதல் ஏற்பட்டு, அதன் காரணமாக இதயத்தில் ஏற்படுகிற அடைப்புகளை நீக்கும் தன்மை சுண்டை வற்றலுக்கு இருக்கிறது. இதில் இருக்கிற குறிப்பிட்ட வேதிப்பொருள் வீக்கத்தைக் குறைத்து வலி நிவாரணியாகவும் இதயத்தை பாதுகாக்கிறதாகவும் விளங்கிறது.

சிறுநீரக பாதுகாப்பு

நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கும், நீரிழிவின் காரணமாக சிறுநீரகத்தில் ஏற்படுகிற பாதிப்புகளை குறைப்பதற்கான தன்மையும் சுண்டை வற்றலில் இருக்கிறது. சுண்டை வற்றல் சீரான அளவில் சிறுநீரை வெளியேற்றுவதற்கு உதவுகிற தன்மையும் பெற்றிருக்கிறது. உடலுக்கு தீங்கு தரக்கூடிய யூரிக் அமிலத்தை நீக்கும். சுண்டை வற்றலை தொடர்ந்து உணவு உட்கொண்டு வருகிறபோது ஃப்ரக்டோஸ் என்னும் அதிக சர்க்கரையினால் ஏற்படுகிற அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வளரும் பிள்ளைகளுக்கு

சாப்பிடும் உணவின் சத்து பிள்ளைகள் உடலில் சேராவிட்டால் சுண்டைக்காயை கொடுக்கலாம். அப்போது உணவின் சாரம் முறையாக உறிஞ்சப்பட்டு, உடலில் சதைப் பிடிக்க ஆரம்பித்துவிடும்.

பொது மருத்துவ இயல்பு

முதிர்ந்த சுண்டையின் பழங்களை அரைத்து நெற்றியில் பற்றுப் போட, தலைவலி குறையும். முதிராத சுண்டையைச் சமைத்துச் சாப்பிட சளி, இருமல் மறையும். சுண்டை வற்றல், நெல்லி வற்றல், வெந்தயம், மாதுளை ஓடு, சீரகம், கறிவேப்பிலை இவற்றை இலேசாக வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டு, ஐந்து சிட்டிகை அளவு மோரில் கலந்து அருந்தினால் வயிறு கழிவதும், ஆசனவாய் எரிச்சலும் குறையும். சுண்டை இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களில் வைத்துக் கட்டலாம். உடலின் வெப்பத்தைக் குறைக்க, இதன் இலைச் சாற்றைப் பருகலாம். சுண்டையின் கசப்புச் சுவையை ஈடுகட்ட, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம்.

You'r reading சிறுநீரகம் மற்றும் இதயத்தை பாதுகாக்கும் காய் எது தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை