ஓரினச் சேர்க்கை நண்பரால் இஸ்ரோ விஞ்ஞானி கொலை.. ஐதராபாத் போலீஸ் தகவல்..

ISRO scientist Suresh Kumar was murdered by gay sex partner for money

by எஸ். எம். கணபதி, Oct 5, 2019, 13:11 PM IST

இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ்குமார் ஓரினச் சேர்க்கை நண்பரால் கொலை செய்யப்பட்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்திய விண்வெளி கழகத்தின்(இஸ்ரோ), தேசிய தொலையுணர்வு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி எஸ்.சுரேஷ்குமார்(56), ஐதராபாத்தில் வசித்து வந்தார். அமீர்பேட்டை எஸ்.ஆர். நகரில் அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் அவர் கடந்த 20 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

சுரேஷ்குமாரின் மனைவி இந்திராவும், மகளும் சென்னையில் வசிக்கின்றனர். மகன் அமெரிக்காவில் இருக்கிறார். இந்திரா, சென்னையில் உள்ள வங்கியில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், சுரேஷ் குமார் கடந்த 1ம் தேதயின்று அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதற்கு முன் தினம் மாலையில் அவர் அலுவலகத்தில் இருந்து வந்த போது மழையில் நனைந்திருந்ததாகவும், அதனால் அவர் வேலைக்கு செல்லவில்லை என்றும் அக்கம்பக்கம் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

எஸ்.ஆர்.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணா கூறுகையில், சுரேஷ் குமாரின் தலையில் பின்புறம் மூன்று இடங்களில் காயம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுரேஷ்குமாருக்கு சீனிவாஸ்(39) என்ற ஓரினச்சேர்க்கை நண்பர் இருந்துள்ளார். அந்த நண்பருக்கும், இவருக்கும் இடையே செக்ஸ் உறவு இருந்துள்ளது. அவருடன் ஏற்பட்ட பணப் பிரச்னையில்தான், சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து, ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் கூறுகையில், சுரேஷ் குமாருடன் அவரது நண்பர் சீனிவாஸ் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தது அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்ததில் தெரிய வந்தது. அதே போல், மொபைல் போன் பதிவுகளை ஆய்வு செய்ததிலும் இது உறுதியானது. இதையடுத்து, சீனிவாசை விசாரித்த போது உண்மை வெளியே வந்தது. சீனிவாசுக்கும், சுரேஷ்குமாருக்கும் இடையே ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்துள்ளது.

அதனால், சீனிவாசுக்கு சுரேஷ்குமார் பணம் கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று சுரேஷ்குமாரிடம் இருந்த பணம் மற்றும் மோதிரத்தை பறித்து செல்வதற்காக, அவரை சீனிவாஸ் தாக்கியுள்ளார். அதில் சுரேஷ்குமார் உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்தார். சீனிவாசை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

You'r reading ஓரினச் சேர்க்கை நண்பரால் இஸ்ரோ விஞ்ஞானி கொலை.. ஐதராபாத் போலீஸ் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை