கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட வேண்டும். இந்திய வெளியுறவு அமைச்சர் அழைப்பு..!

We must unite in the fight against corona infection. Indian Foreign Minister calls

by Balaji, Oct 7, 2020, 17:54 PM IST

கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒருமித்த கருத்துடைய நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜப்பான் நாட்டில் நடந்த "குவாத் " கூட்டத்தில் அழைப்பு விடுத்தார்.இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் அல்லது குவாத் ( quad ) என்று அழைக்கப்படுகிறது.

இந்த அமைப்பின் கூட்டம் டோக்கியோவில் நேற்று நடந்தது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெர்ன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்ஷு மோடெக்ஜி மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. எனவே ஒருமித்த கருத்துடைய நாடுகள் கொரோனா வைரஸ் க்கு எதிரான போராட்டத்தில் மிகவும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டுமென்று ஜெய்சங்கர் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.அடுத்த ஆண்டு ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் என்ற அடிப்படையில் உலகளாவிய சவால்களுக்கு எல்லா நாடுகளும் இணைந்து தீர்வு காண முயல வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் ஐ. நா. சபை அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் இந்தியா வலியுறுத்தத் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். உயிர்த்துடிப்புள்ள பன்முகத் திறன் கொண்ட ஜனநாயக நாடு என்ற அடிப்படையிலும் ஜனநாயக கருத்துக்கள் மதிப்பீடு களை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் என்ற வகையிலும் ஒளிவுமறைவில்லாத கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு அணுகுமுறையை மேற்கொள்ள நாடுகள் முன்வரவேண்டும்.குறிப்பாக இந்து பசிபிக் பிரச்சனையைப் பொறுத்தமட்டில் திறந்த மனதுடன் சரியான அணுகு முறையைச் சம்பந்தப்பட்ட நாடுகள் மேற்கொள்வது அவசியம் என்றும் அவர் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீன கடற்படையின் நடவடிக்கைகள் மற்ற நாடுகளின் உரிமைகளை மீறுவதாக உள்ளது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.கூட்டம் துவங்கும் முன்னர் நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஜப்பானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள யோஷிஹைடு சுகா-வை மரியாதை நிமித்தமாக
சந்தித்துப் பேசினார்கள்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ விடனும் ஜெய்சங்கர் நேரடி பேச்சு நடத்தினார்.கொரானாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தோ பசிபிக் பகுதியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்ய இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும் என இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர்.

You'r reading கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட வேண்டும். இந்திய வெளியுறவு அமைச்சர் அழைப்பு..! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை