சபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்படுமா?

by Nishanth, Nov 25, 2020, 11:02 AM IST

வருமானம் கடுமையாகக் குறைந்துள்ளதால் சபரிமலை கோவிலில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசிடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தேவசம் போர்டு தலைவர் வாசு கேரள அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகின்ற போதிலும் மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜை நாட்களில் தான் லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள். மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் கட்டுக்கடங்காத அளவில் சபரிமலையில் பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பல நாட்களில் பல மணி நேரத்திற்கும் அதிகமாகப் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வந்தனர். ஆனால் இந்த வருடம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கொரோனா பரவல் காரணமாகத் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பக்தர்களும் சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இதனால் சபரிமலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குக் கோவில் வளாகம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் நடை திறந்திருக்கும் நாட்களில் 18ம்படி முன் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் ஆழியும் அணைந்தது இதுவே முதல் முறையாகும். பக்தர்கள் வருகை குறைந்ததைத் தொடர்ந்து சபரிமலை கோவில் வருமானம் கடுமையாகக் குறைந்துள்ளது. இதனால் கோவில் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஏற்கனவே திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இதுகுறித்து கூறுகையில், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்நிலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கூறி திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் 10,000 பக்தர்களை அனுமதிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் சபரிமலையில் உள்ளன என்றும், எனவே இது குறித்து உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இது தொடர்பாகக் கேரள அரசு விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

You'r reading சபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்படுமா? Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை