இந்தியாவில் கொரோனா பாதிப்பு 92 லட்சமாக அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் பாதிப்பு குறைகிறது..

by எஸ். எம். கணபதி, Nov 25, 2020, 10:26 AM IST

இந்தியாவில் இது வரை 92 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இந்நோய்ப் பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்று(நவ.25) காலை நிலவரப்படி, இது வரை 92 லட்சத்து 22,217 பேருக்குப் பரவியிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 44,372 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. நேற்று மட்டும் இந்நோய்க்கு 481 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 34,699 ஆக உயர்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்குப் பின்பு படிப்படியாகக் குறைந்து நாளொன்றுக்குத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது.

மாநிலம் முழுவதும் நேற்று(நவ.24) 66 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1557 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 77,176 பேராக உள்ளது.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1910 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 49,662 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 17 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,639 ஆக அதிகரித்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

சென்னையில் நேற்று 469 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கோவை மாவட்டத்தில் நேற்று 146 பேருக்குத் தொற்று பாதித்தது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 90 பேருக்கும், திருவள்ளூர் 73, காஞ்சிபுரம் 73, சேலம் 78, திருப்பூர் 58 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்கே நேற்று தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 12,970 பேருக்கும், செங்கல்பட்டில் 47,072 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 40,578 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27,375 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் தற்போது 11,875 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

You'r reading இந்தியாவில் கொரோனா பாதிப்பு 92 லட்சமாக அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் பாதிப்பு குறைகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை