கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு 28 வருடங்களுக்கு பின் 22ம் தேதி தீர்ப்பு

by Nishanth, Dec 11, 2020, 11:19 AM IST

கேரள கன்னியாஸ்திரி அபயா மர்மமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் 28 வருடங்களுக்குப் பின்னர் வரும் 22ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் 2 பாதிரியார்கள் மற்றும் ஒரு கன்னியாஸ்திரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என்று குறிப்பிடத்தக்கது.கேரள மாநிலம் கோட்டயத்தில் பயஸ் டென்த் கான்வென்ட் என்ற கன்னியாஸ்திரிகள் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தில் அபயா என்ற கன்னியாஸ்திரி தங்கியிருந்தார். இவர் கோட்டயத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி அந்த ஆசிரமத்தில் உள்ள கிணற்றில் கன்னியாஸ்திரி அபயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலையின் பின் பகுதி மற்றும் வலது காதில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோட்டயம் போலீசார் விரைந்து சென்று அபயாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அபயா தவறுதலாகக் கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் கூறினர். ஆனால் அதை அபயாவின் பெற்றோர் ஏற்கவில்லை. தங்களது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், இது குறித்து இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களும், அபயா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினர்.ஆனாலும் அதை ஏற்காமல் அபயாவின் பெற்றோர் தங்களது மகள் மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கன்னியாஸ்திரி அபயா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதன்பின்னர் சிபிஐ நடத்திய விசாரணையில் தான் அபயா கொல்லப்பட்டார் என தெரியவந்தது. இதுதொடர்பாக பாதிரியார்களான தாமஸ் கோட்டூர், ஜோஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாதிரியார்கள் தாமஸ் மற்றும் ஜோஸ் ஆகியோர் கன்னியாஸ்திரி செபியுடன் தகாத உறவு வைத்திருந்ததாகவும், சம்பவத்தன்று அதை கன்னியாஸ்திரி அபயா பார்த்து விட்டதால் தான் அவரை தலையில் அடித்து கிணற்றில் போட்டதாகவும் சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி 2 பாதிரியார்கள், கன்னியாஸ்திரி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவனந்தபுரத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பாதிரியார் ஜோஸ் மீது போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது.

இதையடுத்து பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபிக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களாக திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் வரும் 22ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்ட வழக்கில் 28 வருடங்களுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு 28 வருடங்களுக்கு பின் 22ம் தேதி தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை