கொரோனாவுக்கு இலவச தடுப்பூசி கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது புகார்

by Nishanth, Dec 13, 2020, 14:37 PM IST

கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறினார். தற்போது கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதால் முதல்வரின் இந்த அறிவிப்பு தேர்தல் நடைமுறை சட்டத்திற்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 30,254 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98.57 லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் 3.56 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 93.5 பேர் நோய் பாதித்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் மரணமடைந்தனர்.

இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,43,019 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தினசரி நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்தை தாண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு குறைந்துள்ளது. இந்தியா முழுதும் நோய் குறைந்து வருகின்ற போதிலும் சிறிய மாநிலமான கேரளாவில் தற்போது நோய் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இங்கு சராசரியாக 6 ஆயிரம் பேர் நோயால் பாதிக்கப்படுகின்றனர். மரண எண்ணிக்கையும் தற்போது கேரளாவில் அதிகரித்துள்ளது. தினசரி சராசரியாக 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைகின்றனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், கேரளாவில் கொரோனா நோய் பரவல் சிறிது அதிகரித்து வருகின்ற போதிலும், தற்போது அச்சப்படும்படியாக எதுவும் இல்லை. பொது இடங்களில் அனைவரும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இது இந்தியாவில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. கேரளாவுக்கு தடுப்பூசி எந்த அளவுக்கு கிடைக்கும் என்று தெரியாது. ஆனாலும் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும். யாரிடம் இருந்தும் தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று கூறினார். பினராயி விஜயனின் இந்த அறிவிப்பு தேர்தல் நடைமுறை சட்டத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ், பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கேரளாவில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

நாளை நான்கு மாவட்டங்களில் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா இலவச தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருப்பது தேர்தல் நடைமுறை சட்டத்திற்கு எதிரானது என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறியுள்ளார். வாக்காளர்களை கவர்வதற்காகவே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார் என்றும், கொரோனா தடுப்பூசி குறித்து இதுவரை மத்திய அரசு கூட எதுவும் அறிவிக்காத நிலையில் பினராயி விஜயன் இவ்வாறு கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் கேரள பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

You'r reading கொரோனாவுக்கு இலவச தடுப்பூசி கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது புகார் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை