`இந்திய முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான் வரும்.. திரிணாமுல் தலைவர் பேச்சால் வலுக்கும் சர்ச்சை!

by Sasitharan, Mar 26, 2021, 15:57 PM IST

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தலைவர் இந்தியாவின் “30% முஸ்லீம் மக்கள் ஒன்றாக வந்தால் நான்கு பாகிஸ்தானை உருவாக்க முடியும்" என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பேசியவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆலம் ஷேக். தனது ஆதரவாளர்கள் மத்தியில் பீர்பூமில் உள்ள நானூரில் உள்ள பாசா பாராவில் உரையாற்றிய ஆலம் ஷேக், ``இங்கு சிறுபான்மையினரான நாங்கள் 30%. மீதமுள்ளவர்கள் 70%. இந்த 70% வாக்குகள் பெற்று பாஜக வங்காளத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கு பாஜக வெட்கப்பட வேண்டும்… 30% சிறுபான்மையினர் ஒன்றுபட்டால்… இந்தியாவின் முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், நான்கு பாகிஸ்தானை உருவாக்க முடியும். அப்போது இந்த 70% பேர் எங்கே போவார்கள்?" என்று பேசினார்.

இவரின் இந்தக் கருத்துக்கள் மூலம், இந்தியாவை திரிணாமுல் உடைக்க நினைக்கிறது என்று பாஜகவினர் குற்றம் சாட்டி ஆலம் ஷேக்கிற்கு கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். பாஜகவை சேர்ந்த அமித் மால்வியா, ``ஆலம் ஷேக் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி பேசியிருக்கிறார். ஆனால் மம்தா அவரின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறாரா?. எங்களுக்கு அது போன்ற ஒரு வங்காளம் வேண்டுமா?. இதை தெளிவுபடுத்த வேண்டும்.

வித்யாசாகர், ரவீந்திரநாத் மற்றும் சுவாமி விவேகானந்தர் என்று பெருமை பேசும் வங்கம், இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்கப் பழக்கமில்லை. ஒரு முதல்வரிடமிருந்து வருவது வெட்கக்கேடானது. ஆலம் ஷேக் போன்ற டி.எம்.சி தலைவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் மம்தா பானர்ஜியின் வெட்கக்கேடான சமாதான அரசியல் காரணமாக 4 பாகிஸ்தானைக் கனவு காணும் தைரியம் உள்ளது. வங்காளத்தில் பெரும்பான்மை சமூகத்தை இரண்டாம் தர குடிமக்களாக குறைத்துள்ளார் மம்தா" என்று குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதேபோல் பாஜக தலைமையும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது.

``பிற சமூகங்களின் செலவில் மம்தா பானர்ஜியின் அரசாங்கம் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தி வருகிறது" என்று பாஜக தலைமை விமர்சனம் செய்துள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் பிர்பூம் மாவட்டத் தலைவர் அனுப்ரதா மண்டலோ, ``ஷேக்கின் வகுப்புவாத கருத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. மேலும் ஷேக் கட்சியின் பொறுப்பில் இல்லை. எனினும் அவரின் பேச்சை நான் காணவில்லை. ஆனால் அவரது சரியான உரையை நான் கவனிப்பேன்" என்றார். பின்னர் சில மணி நேரங்களில் ஷேக் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார்.

தொடரும் சர்ச்சை பேச்சுக்கள்!

மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து சர்ச்சை பேச்சுக்கள் வெளிப்பட்ட வண்ணம் உள்ளன. சமீபத்தில் மம்தா விபத்தில் சிக்கி காலில் அடிபட்டது. இதனால் பிரச்சாரத்துக்கு காலில் கட்டு போட்டுகொண்டு, வீல் சேரில் தான் வருகிறார். இதனை பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ், ``தனது காயமடைந்த காலைக் காட்ட விரும்பினால் புடவைக்கு பதிலாக பெர்முடாஸை அணிந்திருக்க வேண்டும்" என மம்தாவை குறிவைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த நிலையில் ஷேக் இப்படி சர்ச்சையாக பேசி சிக்கிக்கொண்டுள்ளார்.

You'r reading `இந்திய முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 4 பாகிஸ்தான் வரும்.. திரிணாமுல் தலைவர் பேச்சால் வலுக்கும் சர்ச்சை! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை