டெல்லி, பஞ்சாப் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருதை அம்பயருக்கு தான் கொடுக்க வேண்டும் சேவாக் காட்டம்..!

Preity zinta, virendar sehwag fume at umpires controversial short run call

by Nishanth, Sep 21, 2020, 16:49 PM IST

டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 1 ரன்னை பறித்த அம்பயருக்குத் தான் அந்தப் போட்டிக்கான மேன் ஆப் தி மேட்ச் விருதைக் கொடுக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் காட்டத்துடன் கூறியுள்ளார்.

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்று மிகவும் பரபரப்பாக நடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இரு அணிகளும் 157 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவருக்கு சென்ற அந்த போட்டியில், பஞ்சாப் நிர்ணயித்த 3 ரன்கள் என்ற வெற்றி இலக்கை வெறும் 2 பந்துகளில் எடுத்து டெல்லி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் தோற்றதற்கு அம்பயர் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

பஞ்சாப் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தான் அந்த துயர சம்பவம் நடந்தது. ரபாடா 19-வது ஓவரை வீச வந்தபோது பஞ்சாப்புக்கு வெற்றிபெற 25 ரன்கள் தேவைப்பட்டது. நல்ல பார்மில் இருந்த மாயங்க் அகர்வாலும், ஜோர்டானும் கிரீசில் இருந்தனர். ரபாடாவின் முதல் பந்தில் மாயங்கால் ரன் எடுக்க முடியவில்லை. ஆனால் இரண்டாவது பந்தில் அவர் ஒரு பவுண்டரி விளாசினார். மூன்றாவது பந்தில் அகர்வால் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசைக்குத் தட்டிவிட்டு ஓடினார். அந்த பந்தில் 2 ரன்கள் அவர் எடுக்கவும் செய்தார். ஆனால் ஜோர்டான் இரண்டாவது ரன்னை எடுக்கும்போது கிரிசைத் தொடவில்லை என்று கூறி லெக் அம்பயர் நிதின் மேனன் ஒரு ரன் மட்டுமே அனுமதித்தார்.

ஆனால் டிவி ரீபிளேயில் பார்த்தபோது ஜோர்டான் கிரிசைத் தொடுவது நன்றாகத் தெரிந்தது. இறுதியில் அந்தப் போட்டி சமநிலையில் முடிந்தது. இதன் பின்னர் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்று டெல்லி வெற்றிக் கனியைப் பறித்தது. அந்த ஒரு ரன்னை கொடுத்திருந்தால் பஞ்சாப் வெற்றி பெற்றிருக்கும் என்று அதன் ரசிகர்கள் கூறுகின்றனர். அம்பயரின் இந்த நடவடிக்கைக்கு வீரேந்திர சேவாக் மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரீத்தி ஜிந்தா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சேவாக் கூறுகையில், இந்த போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது கொடுத்ததில் எனக்கு முரண்பாடு இருக்கிறது. சரியாகப் பார்த்தால் அம்பயர் நிதின் மேனனுக்குத் தான் இந்த விருதைக் கொடுத்திருக்க வேண்டும் என்று காட்டத்துடன் கூறினார்.ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில், 5 முறை கொரோனா பரிசோதனையும், 6 நாள் குவாரன்டைனையும் முடித்த பின்னர் தான் எனது அணி வீரர்களுடன் நான் இணைந்தேன். ஆனால் அவை ஒன்றும் என்னை வேதனைப்படுத்தவில்லை. அம்பயரின் இந்த தவறான முடிவு தான் எனக்கு கடும் வேதனையை ஏற்படுத்தியது என்றார்.

You'r reading டெல்லி, பஞ்சாப் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருதை அம்பயருக்கு தான் கொடுக்க வேண்டும் சேவாக் காட்டம்..! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை