கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்! ஏமாந்து போன ஹைதராபாத்!

IPL match SRH vs RR

by Loganathan, Oct 11, 2020, 21:35 PM IST

ஐபிஎல் லீக் சுற்றின், ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஹைதராபாத் சார்பாக களமிறங்கிய பேர்ஸ்டோ மற்றும் வார்னர் மெதுவாக ஆட்டத்தை தொடங்கினர். ஆனால் ஐந்தாவது ஓவரை தியாகி வீச பேர்ஸ்டோ கிடைத்த ஷார்ட் பாலை தூக்கி பவுண்டரி லைனில் விளாசினார். மீண்டும் தியாகி அதே பாலை கொஞ்சம் மெதுவாக வீச, அது தனக்கு விரித்த வலை என்பதை அறியாத பேர்ஸ்டோ தூக்கி அடிக்க மிட் ஆன் திசையில் சாம்சனிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

பின்னர் வார்னருடன் இணைந்த மனிஷ் பாண்டே இருவரும் நிதானமாக டெஸ்ட் மேட்ச் விளையாடினர். ஹரி படம் போல வேகமெடுப்பார்கள் என்று பார்த்தால் கடைசி வரை பாலா படம் போல விருதுக்காக ஆடிக்கொண்டு இருந்தனர் இந்த புண்ணியவான்கள். யாராவது அவுட் ஆனால் போதும் என்ற அளவுக்கு வெறுப்பேற்றினர் இருவரும், பின்னர் ஒருவழியாக 15 வது ஓவரை வீசிய ஆர்சர் வார்னர் (38 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சர் என 48 ரன்கள்) விக்கெட்டை வீழ்த்தினார். ஒருபுறம் மனிஷ் பாண்டே 44 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சர் என 54 ரன்களை விளாசி 18 வந்து ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.

ஒருவழியாக ஹைதராபாத் அணி இருபது ஓவர் முடிவில் 158/4 ரன்களை விளாசியது. விக்கெட்டுகள் இருந்தும் மெதுவாக விளையாடியதே ஹைதராபாத் அணியின் தோல்விக்கு காரணம். இருபது ஓவரில் 159 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வழக்கம் போல் சொதப்பியது. முதன்முதலாக களமிறங்கிய பென் ஸ்டோக்ஸை தொடக்க ஆட்டக்காரராக இறக்கி அனைவருக்குமே ஆச்சரியம் அளித்தார் ஸ்மித் ஆனால் 5 ரன்களில் போல்டாகி ஸ்மித் துக்கு ஆச்சரியம் அளித்து வெளியேறினார் ஸ்டோக்ஸ். இந்த போட்டியிலாவது அடிப்பாரா என எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் ஸ்மித் ரன் அவுட் ஆக, இதோ நானும் வாரேன் என 16 ரன்களில் வெளியேறினார் பட்லர்.
26/3 என தோல்விக்காகவே விளையாடியது ராஜஸ்தான்.

ஆனால் சாம்சன் மற்றும் உத்தப்பா இருவரும் அணியை வெற்றி பாதைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாம்சன் 26, உத்தப்பா 18 ல் வெளியேறி ஆடியன்ஸையும் வெறுப்பேற்றினர். ஆனால் 78/5 என்றிருந்த அணியை, ராஜஸ்தானின் பாகுபலியாக தன்னை முன்னிலைப்படுத்தி மெதுவாக அணியை வெற்றி பாதையில் இழுத்து வந்தார் ராஜஸ்தானின் ராகுல். ராகுல் திவேதியா மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரஷித் கான் வீசிய 18 வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி திவேதியா வெற்றியை ஹைதராபாத் அணியிடம் இருந்து பிடுங்கினார். கடைசியில் 2 பந்தில் 2 ரன் என்ற நிலையில் கடைசி ஓவரின் 5 வது பந்தை ஆஃப் சைடு திசையில் சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் பராக். கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை தேடி தந்த திவேதியா 45 மற்றும் பராக் 42 ரன்களையும் விளாசினர்.

ஹைதராபாத் அணி சார்பில் ரஷித் கான் மற்றும் கலீல் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியின் கதாநாயகனான ராகுல் திவேதியாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

You'r reading கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்! ஏமாந்து போன ஹைதராபாத்! Originally posted on The Subeditor Tamil

More Ipl league News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை