அரசியலுக்கு ஏது மதம்.. சசிகலாவுக்காக அ.ம.மு.க நிர்வாகிகள் வழிபாடு..

by எஸ். எம். கணபதி, Feb 7, 2021, 15:47 PM IST

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே எம்மதமும் சம்மதம் என்கிற அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்காக கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். பெங்களூரு சிறையில் இருந்த போது கொரோனா பாதிக்கப்பட்ட சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது தமிழகம் முழுவதும் அமமுகவினர் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தினர்.

இதனிடையே சசிகலா நாளை(பிப்.8) காலை பெங்களூருவிலிருந்து சென்னை புறப்பட உள்ளார். இந்த சூழலில், திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றிய அமமுகவினர் சசிகலாவுக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். திருச்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றியச்செயலாளர் துளசி சேகரன் மற்றும் ஒன்றிய இணைச் செயலாளர் என்.எஸ்.என். அப்துல்லா ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

இதில் என்.எஸ்.என். அப்துல்லா இஸ்லாமியராக இருப்பினும் கூட, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கோயிலில் நடைபெற்ற தேங்காய் உடைப்பு நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார். இது குறித்து எழுந்த இதேபோல் துளசி சேகரன் தர்ஹாவில் நடைபெற்ற சிறப்பு துஆ-வில் கலந்துகொண்டார். பெருநகரங்களில் மதத்தை வைத்து அரசியல் செய்து வரும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ஊரகப்பகுதிகளில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

You'r reading அரசியலுக்கு ஏது மதம்.. சசிகலாவுக்காக அ.ம.மு.க நிர்வாகிகள் வழிபாடு.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை