ஓட்டுப் போட்டா போடுங்க... போடாட்டி போங்க.... தம்பித்துரையின் தெனாவெட்டு பேச்சால் மக்கள் அதிர்ச்சி
public shocked over Karur admk candidate thambithurai speech
மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதியில் மீண்டும் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் தம்பித்துரை, ஓட்டுக் கேட்கச் சென்ற இடத்தில் பிரச்னைகளைக் கூறி பொது மக்கள் முற்றுகையிட்டதால் ஆத்திரமடைந்தார். ஓட்டுப் போட்டால் போடுங்கள் .. போடாவிட்டால் போங்கள்... என்று தெனாவட்டாக கூறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த முறை கரூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாகி மக்களவை துணை சபாநாயகராகவும் இருந்தவர் தம்பித்துரை . வெற்றி பெற்ற பின் தொகுதிக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்று இவர் மீது தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தொகுதிக்குள் செல்லும் போதெல்லாம் பொதுமக்கள் முற்றுகையிடுவது வாடிக்கையானது. இதனால் சமீப காலமாக தொகுதிக்குள் செல்வதையே தவிர்த்து வந்தார்.
இதனால் இம்முறை கரூர் தொகுதியில் போட்டியிடுவாரா? என்ற சந்தேகம் கூட எழுந்தது. ஆனால் மீண்டும் நீங்கள் தான் போட்டியிட வேண்டும் என்று கரூர் தொகுதியை தம்பித்துரையின் தலையில் கட்டி விட்டது அதிமுக தலைமை .
தற்போது கரூர் தொகுதியில் தம்பித்துரையை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணி நிறுத்தப்பட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுலின் சிபாரிசில் சீட் வாங்கி போட்டியிடும் ஜோதிமணி, இந்த முறை தம்பித்துரைக்கு கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்த கையோடு கரூர் தொகுதியில் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார் தம்பிதுரை . கரூர் அருகேயுள்ள ஏமூர் புதூர் காலனியில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் பேருந்து வசதியில்லை என்றும் கூறி தம்பிதுரையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கோபமடைந்த தம்பிதுரை, நீங்க ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டி போங்க.... அதற்காக உங்க கைல, காலுல விழ முடியாது என்று தெனாவட்டாகப் பேச பொது மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
தொடர்ந்து பேசிய தம்பித்துரை,பேருந்து விடுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். ரூ.81 கோடியில் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொகுதியில் 8,000 கிராமங்களுக்குச் சென்றுள்ளேன். இதற்கு முன் பலர் எம்பிக்களாக இருந்துள்ளனர். அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கூறி அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார்.
இதே போன்று பெரம்பலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் என்.ஆர் சிவபதியையும் து.களத்தூர் என்ற கிராமத்தில் மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். தற்போதைய எம்.பி.யான அதிமுகவின் மருதராஜா, கடந்த 5 ஆண்டுகளாக தொகுதிப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை என்று கூறி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
You'r reading ஓட்டுப் போட்டா போடுங்க... போடாட்டி போங்க.... தம்பித்துரையின் தெனாவெட்டு பேச்சால் மக்கள் அதிர்ச்சி Originally posted on The Subeditor Tamil
More Special article News