51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?

by Madhavan, Apr 22, 2021, 08:38 AM IST

51வது பூமி தினமான இன்று, பூமி தினம் உருவாக்கப்பட்ட வரலாறு குறித்தும், அதன் நோக்கம் குறித்தும் அறிந்து கொள்வது அவசியம்.

பல்வேறு வியக்கத்தக்க அம்சங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது நாம் வாழும் பூமி.கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் முதல் காட்டை ஆளும் பெரும் விலங்குகள் வரை அத்துனை உயிர்களுக்குமானது இப்பூமி. பல லட்சக்கணக்கான உயிரினங்களுக்கும், 780 கோடி மனிதர்களுக்கும் ஒற்றைக்கூடு இது.

இங்கு ஓர் உயிரினம், மற்றொரு உயிரினத்தை உணவுக்காக அடித்துக் கொல்லும். மழை, வெயிலின் உதவியோடு உயிர் பிடிக்கும் தாவரங்கள், அதீத வெள்ளத்தாலும், தாங்காத வெப்பத்தாலும் அழிவதும் உண்டு. ஆனால் எந்த உயிரினமும் பூமியின் சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை, மனிதனைத் தவிர.

ஆறறிவு படைத்த மனிதன் மட்டுமே பூமியின் சுற்றுச்சூழலை சிதைக்கும் உயிரினமாக திகழ்கிறான். உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படையாகத் திகழும் நீர், நிலம் காற்று ஆகிய மூன்றையும் மாசுபடுத்துவதில் மனிதனுக்கு நிகர் மனிதன் மட்டுமே. சுற்றுச்சூழல் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், அதுகுறித்து விழிப்புணர்வு குரல்களும் எழாமல் இருக்கவில்லை. மனித செயல்பாடுகளால் புவி வெப்பமடைதல், பருவமழை தவறுதல், காற்று மாசுபாடு, நீர்நிலைகள் மாசுபாடு ஆகியவை குறித்து உலகெங்கும் கவலையோடு கூடிய அக்கறைக்குரல்கள் எழுந்துகொண்டேதான் உள்ளன.

அந்தவகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வையும் பிரசாரத்தையும் மேற்கொள்ளும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு "இயற்கையை மீட்டெடுப்போம்”" என்ற நோக்கத்துடன் உலகெங்கும் 51வது பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்ட்ரா பார்பரா நகரை ஒட்டிய கடல்பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதன் தாக்கம் காரணமாக, 1970ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பின் தேவையை வலியுறுத்தி, கடலோரமாக ஊர்வலம் சென்றனர். அப்போது இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் கல்வி, நகர்ப்புறங்களில் பசுமைப்பகுதியை அதிகரிப்பது, மரக்கன்றுகள் நடுவது, மண் வளத்தைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழலை பாதிக்காத நுகர்வு வாழ்க்கை முறையை ஏற்படுத்துக்கொள்வது, பிளாஸ்டிக்கை தவிர்ப்பது, சுவாசிக்கும் காற்றை சுகாதாரமாக வைத்திருப்பது, வெப்பமயமாதலை குறைப்பது போன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கான உந்துசக்தியாக இந்நாள் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இப்பூமியை பாதுகாப்பதில், முழு பங்களிப்பும் மனிதர்களுக்கே உண்டு. இந்நாளில் இந்தப் பூவுலகை காக்க உறுதியேற்போம்

You'r reading 51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு? Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை