விராட் கோலி போராட்டத்தால் தப்பிப் பிழைத்தது இந்தியா!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னின்ங்ஸில் இந்திய அணி 307 ரன்கள் குவித்தது.

Jan 15, 2018, 22:41 PM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னின்ங்ஸில் இந்திய அணி 307 ரன்கள் குவித்தது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக மார்க்ரம் 94 ரன்களும், ஹசிம் அம்லா 82 ரன்களும், கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி 63 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதில் இந்திய அணி சில கேட்சுகளை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 10 ரன்களிலும், புஜாரா டக் அவுட் ஆகியும் வெளியேறினர். இதனால், இந்திய அணி 28 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

பின்னர் விராட் கோலி, முரளி விஜய் இருவரும் இணைந்து அணியின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்தனர். பிறகு முரளி விஜய் 46 ரன்களில் வெளியேறினார். அவரை தொடர்ந்து, ரோஹித் சர்மா 10 ரன்னிலும் பார்த்திவ் படேல் 19 ரன்களிலும் வெளியேற 164 ரன்களுக்கு முக்கியமான 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால், மறுபுறம் கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று போராடினார். அடுத்து வந்த ஹர்த்திக் பாண்டியா தனது மெத்தனமான ஆட்டத்தால் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அற்புதமாக ஆடிய விராட் கோலி, 246 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது 21ஆவது டெஸ்ட் சதமாகும். மேலும், தென் ஆப்பிரிக்கா மைதானங்களில் இந்திய கேப்டனால் அடிக்கப்பட்ட இரண்டாவது சதமாகும். முன்னதாக, 1996-97ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் 169 ரன்கள் குவித்திருந்தார்.

விராட் கோலிக்கு உறுதுணையாக அஸ்வின் விளையாடிக்கொண்டு இருந்தார். பின்னர் அஸ்வின் 38 ரன்னிலும், மொஹமது சமி 1 ரன்னிலும், இஷாந்த் சர்மா 3 ரன்களிலும் வெளியேறினார்.

150 ரன்களை கடந்த விராட் கோலி, இறுதியாக அணியின் எண்ணிக்கை 307ஆக இருந்தபோது 153 ரன்களில் வெளியேறினார். அத்துடன் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

பின்னர் 28 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், அந்த அணி 3 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது. மார்க்ரம், ஹசிம் ஆம்லா இருவரும் தலா 1 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினர். இருவரும் பும்ரா பந்தில் எல்.பி.டபள்யூ அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

பின்னர் டீன் எல்கர், டி வில்லியர்ஸ் இணை பொறுப்புடன் ஆடியது. இதனால், மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்துள்ளது. அபாரமாக ஆடிய டி வில்லியர்ஸ் 78 பந்துகளில் [6 பவுண்டரிகள்] அரைச்சதத்துடனும், டீன் எல்கர் 36 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

You'r reading விராட் கோலி போராட்டத்தால் தப்பிப் பிழைத்தது இந்தியா! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை