கிரிப்டோகரன்ஸி, பிட்காயின் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...

by Isaivaani, Jan 17, 2018, 08:44 AM IST
சமீப காலமாக "கிரிப்டோகரன்ஸி", "பிட்காயின்" தொடர்பான செய்திகள் செய்தித்தாள் மூலமாகவும், இணையதள செய்திகள் மூலமாகவும் அதிகமாக வெளிவருகின்றன.
நம்மில் பலருக்கு கிரிப்டோகரன்ஸி அல்லது பிட்காயின் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கலாம்.
தெரியாதவர்கள் எளிதாக தெரிந்துகொள்ளவும், தெரிந்தவர்கள் சிலவற்றை புரிந்துகொள்ளவும் இக்கட்டுரை உதவும் என நம்புகிறேன்...
முதலீட்டாளர்கள் பலர் தங்கம், வைரம், நிலம், பங்கு பத்திரங்கள் வாங்குவது போன்று இப்போது பிட்காயினை வாங்கத் தொடங்கி விட்டார்கள், நாம் அதை வாங்கி வைத்துக் கொள்ளவில்லை என்றாலும், குறைந்தபட்சம் தெரிந்தாவது வைத்துக் கொள்ளலாமே.!
உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் அச்சடிக்கப்படும் கரன்சி நோட்டுகள், அதன் மதிப்பிலும், உருவத்திலும் நாட்டுக்கு நாடு மாறுபடும்,
கிரிப்டோ கரன்சி என்பது இணையத்தில் மட்டுமே கிடைக்கும் கண்ணுக்குத் தெரியாத பணம் ஆகும்.
இந்த பணம் நேரடியாக பயன்படமால் இணையத்தில் மட்டுமே பயன்படுகிறது.
இது டாலர், யூரோ, பவுண்ட், ருபாய், தினார், யென்,  போன்று நாட்டுக்கு நாடு பெயரும் மதிப்பும் மாறுபடாமல், உலகம் முழுவதிலும் ஒரே மதிப்பை கொண்டதாகும்.
இந்த கிரிப்டோகரன்ஸிகளின் ஒரு வகை தான் "பிட்காயின்" ஆகும்,
பிட்காயின் போலவே Litecoin, Ethereum, Zcash, Ripple போன்ற வேறு சில கிரிப்டோ கரன்சி வகைகளும் உள்ளன.
இவைகளில் பிட்காயின் தான் அபார வளர்ச்சி பெற்ற நாணயம் ஆகும், இது 2009ஆம் ஆண்டு அறிமுகமானது.
ஒவ்வொரு நாட்டு கரன்சியையும் அந்நாட்டின் மத்திய வங்கி வெளியிடும். ஆனால் பிட்காயினை யார் வெளியிடுகிறார்கள் என்பது, அதை பயன்படுத்துபவர்களுக்கே சிதம்பர ரகசியம்.
அதனால் போதை பொருட்கள், ஆயுதங்கள் சட்டவிரோத கடத்தல்கள் உள்ளிட்டவைகளுக்கு அங்கீகாரம் பெற்ற நாடுகளின் கரன்சிகளுக்கு மாற்றாக பிட்காயின் சேவை புரிகிறது.
இதை இணையதளங்கள் மூலம் மட்டுமே வாங்க முடியும் அல்லது விற்க முடியும். Unocoin, Zebpay, Bitxoxo, Coinsecure இணையதளங்கள் இந்தியாவில் பிட்காயின்களை விற்கின்றன.
785 கிரிப்டோ கரன்ஸி முறைகள் உலகம் முழுக்க நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் செயல்படக்கூடிய 11 கரன்ஸி நடைமுறைகள் புழக்கத்தில் உள்ளன. 
உலகளவில் இந்தியர்கள் 11 சதவீதம் கிரிடோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளனர். பெங்களூரில் இயங்கிவரும் யுனோ காயின் என்ற நிறுவனம் பிட்காயின் நாணயமுறையை அடிப்படையாக கொண்டு இயங்கிவருகிறது. 
இந்த நிறுவனத்தில் நீங்கள் பிட்காயினை விற்கவோ வாங்கவோ முடியும்.
இந்தியாவில் மட்டும் மொத்தம் 500 கடைகள் மட்டுமே பிட்காயினை ஏற்றுக்கொள்கின்றனர்.
 2030-ம் ஆண்டில் ஒரு பிட்காயினின் மதிப்பு 5,00,000 டாலர் வரை செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாக ஸ்நாப்சாட் முதலீட்டாளர் ஒருவர் கூறியிருக்கிறார். 
மேலும் தற்போதைக்கு நீங்கள் பிட்காயினை வாங்கினால் அதை பயன்படுத்துவது கடினம். ஆனால் அது முதலீடாக இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் இந்திய வருமான வரித்துறை நடத்திய ஆய்வு ஒன்றில், இந்தியாவில் 6 லட்சம் வர்த்தகர்கள் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை பயன்படுத்துகிறார்கள் என தெரியவந்துள்ளது. 
பதிவு செய்திருக்கும் 25 லட்சம் வர்த்தகர்களில் சுமார் நான்கில் ஒரு பங்கினர் கிரிப்டோ கரன்சி புழக்கத்தை மேற்கொள்கிறார்கள்.
டாலர், பவுண்டுகள் என அங்கீகரிக்கப்பட நாணயங்களுக்கு இணையாக கெத்து காட்டுகிறது டிஜிட்டல் கரன்சியான பிட்காயின். அண்மையில் 2016 ஆம் ஆண்டில் சிறந்த வளர்ச்சி யடைந்த கரன்சியாக பலரும் குறிப்பிட்டது பிட்காயினைத்தான்.
கடந்த ஓராண்டில் மட்டும் பிட்காயின் மதிப்பு 1,700 மடங்கு உயர்ந்தது,
கடந்த வருடம் ஜனவரியில் ஒரு பிட்காயின் மதிப்பு 1,030 டாலராக இருந்தது. ஆனால் இந்த வருட ஜனவரியின் தொடக்கத்தில் இதன் மதிப்பு 17,712.40 டாலர் ஆகும்.
ஆனால் இந்த ஒரு வாரத்தில் மட்டும் இதன் மதிப்பு பயங்கர சரிவை சந்தித்தது, ஆம், தற்போது 4,200 டாலர் குறைந்து 13,268 டாலருக்கு மதிப்பிடப்படுகிறது.
இதோடு சேர்ந்து, எதிரம் எனப்படும் மற்றொரு கரன்சியும் 1,384.64 டாலரில் இருந்து 1,157.29 டாலர் வரையில் சரிந்துள்ளது.
தென் கொரியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் பிட்காயினைத் தடை செய்ததால் தான் கிட்டத்தட்ட 17,000 டாலர்களை தாண்டிய பிட்காயினின் மதிப்பு தற்போது 13,000 டாலராக குறைந்துள்ளது என சொல்லப்படுகிறது.
ஆனாலும் இன்றைய சந்தை மதிப்பில், பிட்காயின் 250.38 பில்லியன் டாலருடன் முதல் இடத்திலும்.
எதிரம் 118.14 பில்லியன் டாலருடன் 2வது இடத்திலும்,
ரிப்பிள் 88.60 பில்லியன் டாலருடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது,
தற்போது உலக அளவில் புழக்கத்தில் உள்ள பிட்காயின்களின் மதிப்பு மட்டும் 18.03 லட்சம் கோடி (இந்திய ரூபாயில்) பிட்காயினில் முதலீடு செய்யலாமா?' என்று கேட்டால், அதற்கு பதில், 'முதலீடு என்பது தனிநபர் விருப்பத்திற்கு உட்பட்டது' என்று தான் சொல்ல முடியும்.
 ஆனால், 2018-ல் பிட்காயின் விலை உயரும். எவ்வளவு உயரும் என்றால், '2018 இறுதிக்குள், 40,000 டாலரை தொடும்' என, முதலீட்டு ஜாம்பவான் மைக்கெல் நோவோக்ராட்ஸ் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அது அவருடைய கருத்து,
மேற்படி விருப்ப உரிமை ஒப்பந்தங்கள் குறிக்கும் விலை, ஜனவரியில் ஏறத்தாழ, 18,000 டாலர் மட்டுமே.
 ஆனால், இப்போதே 17,000 டாலரை தாண்டி மறுபடி இறங்கியுள்ளது,
ஆக விலை உயர்வு நிச்சயம். ஆனால் எவ்வளவு உயரும், எப்போது உயரும், அது எவ்வளவு காலம் நிலைக்கும் என்பன சந்தேகங்களெல்லாம், பங்குச் சந்தையிலேயே பழுத்து கொட்டை போட்ட வல்லுனர்களுக்கே குழப்பமாகத்தான் உள்ளது.
பிட்காயின்களின் விலை மிகவும் செங்குத்தாக ஏறி வருகின்ற காரணத்தினால், பிட்காயின்களில் முதலீடு செய்வது பணம் மிதமிஞ்சி இருப்பவர்களுக்கு சிறந்த முதலீடுதான், ஆனால் சாமானிர்கள் அதில் கால் வைக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.
எனினும் அவற்றில் முதலீடு செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
முதலில், நீங்கள் வாங்க விரும்பும் நிறுவனத்தைக் கவனமாகத் தேர்ந்தெடுக் வேண்டும்.
ஏமாற்றும் நிறுவனங்களில் முதலீடு செய்வது தற்கொலைக்குச் சமமாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், போலி கிரிப்டோகரன்சிகள் பற்றி பல செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.
உங்களுக்கு பிட்காயின் பற்றி அதிகம் தெரியாவிட்டால், அதில் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நல்லது. நீங்கள் அளித்த சேவைக்கு ஈடாக உங்களுக்குப் பிட்காயின் அல்லது வேறு கிரிப்டோகரன்ஸிகள் கிடைத்தால், அந்த காயினை வழங்கிய நிறுவனம் மற்றும் அது உருவான நாட்டின் நம்பகத்தன்மையைப் பரிசோதியுங்கள். 
அதோடு அந்த காயினை மாற்றும் வசதி உள்ளதா என்பதையும் அறிந்திடுங்கள்,
உலகம் முழுவதும் உள்ள அரசுகள் பிட்காயின் பாதுகாப்புக் குறித்துத் தங்களது அச்சத்தினைத் தெரிவித்து வந்தாலும் தனிநபர்கள் இதில் முதலீடு செய்வது என்பது அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.
இந்நிலையில் பிட்காயின்கள் அல்லது கிரிப்டோ கரென்சிகளை வாங்காதீர் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இதை பணப் பரிமாற்றத்தை அங்கீகரிக்காத நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் பிட்காயின் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் பணமான, எந்தவித கிரிப்டோ கரன்ஸியையும் அங்கீகரிக்கவில்லை. இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி "பிட்காயின் முதலீடு என்பது தனிநபரின் சொந்த ரிஸ்க். 
இதற்கு அரசுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது, சட்டத்திற்கு உட்பட்டதல்ல" என்று பல முறை கூறியுள்ளார். 
இதுபோன்ற முதலீடுகள் அனைத்துமே மிகவும் சிக்கலானவை. இது எந்த நேரத்திலும் வெடிக்கும். முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இதுபோன்ற அதிக லாபம் தரும் திட்டங்கள் ஈர்த்து முடிவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளவை. 
எனவே முதலீட்டாளர்களாகிய மக்கள்தான் விழிப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். 
வென்சர் கேபிடல் எனப்படும் துணிகர முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இதுபோன்று டிஜிட்டல் கரன்சியாக வைத்துள்ளனர். 
இது கம்ப்யூட்டர் ஹேக்கர்களால் தாக்கப்படும் அபாயம் உள்ளவை. 
மால்வேர் போன்ற வைரஸ் தாக்குதலுக்கும் இவை உள்ளாகக் கூடியவை. இதனால் பணம் நஷ்டம்தான் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார். லக்‌ஷ்மி காயின் என்ற பெயரில் ஆர்பிஐ வங்கியும் கிரிப்டோ கரன்சி வெளியிடுவதாகக் கூறியது. ஆனால் அதில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.
டிஜிட்டல் பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து, டிஜிட்டல் கரன்சி என்ற முறையை நோக்கி உலகம் உருண்டு கொண்டிருக்கிறது. 
வரும் காலத்தில் பிட்காயின் நம்மை ஆள நேர்ந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.
மேலும், அடுத்து களம் இறங்கப் போகும் "ஜியோ" போன்ற முதலீட்டு நிறுவனங்களின் வேகத்தை பார்த்தால், ஒவ்வொரு இந்திய குடிமகனையும் ஃபிரி 4G சிக்முக்கு அடிமையாக்கியது போல் பிட்காயினுக்கும் அடிமையாக்கி விடுவார்களோ என்ற அச்சம் நெஞ்சோரம் தோன்றுகிறது.
அப்படி நடந்தால் அரசுகளும் சும்மா இருக்க வாய்ப்பில்லை. சீனா, தென்கொரியாவைப் போல் இங்கும் திடீர் தடை வர வாய்ப்பு உள்ளது.
முதலீட்டாளர்கள், பணத்தை போடுவதற்கு முன் இதையெல்லாம் கருத்தில் கொண்டால் நல்லது.
மேற்கண்ட கட்டுரை முதலீட்டுக்கான பரிந்துரை அல்ல. டிஜிட்டல் நாணய சந்தை போக்கின் மதிப்பீட்டையும் அதன் ஏற்ற இறக்கங்களையும் குறித்த ஒரு சிறிய விழிப்புணர்வுக்கான முயற்சி மட்டுமே ஆகும்.
உங்கள் முதலீட்டு முயற்சிகளுக்கு இந்த தளம் பொறுப்பேற்காது, நன்றி.

You'r reading கிரிப்டோகரன்ஸி, பிட்காயின் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்... Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை