ஐபிஎல் பைனல் கோப்பை யாருக்கு? 3 முறை தொடர் தோல்வி..! மும்பையை பழி தீர்க்குமா தோனி படை!AZ

CSK vs MI , IPL final today at Hyderabad

May 12, 2019, 13:57 PM IST

இந்தாண்டின் ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இந்த இரு அணிகளுமே தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவை என்பதால் 4-வது முறையாக பட்டம் வெல்லப் போவது யார் என்ற போட்டா போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

12-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 23–ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளே–ஆப் சுற்றுக்கு முன்னேறின.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


இதனால் விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஒரு வழியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


தொடர்ந்து, இந்தாண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


ஐபிஎல் போட்டிகளில் இந்த இரு அணிகளுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பது போல் சம அளவில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018–ம் ஆண்டுகளிலும், மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017–ம் ஆண்டுகளிலும் தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.சென்னை அணி 10-வது முறையாக ஐபிஎல் போட்டியில் களம் கண்டு அதில் 8–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்து சாதனை படைத்து இருக்கிறது. மும்பை அணி 5 -வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடுகிறது .


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் சிறப்பாக விளையாடினாலும், மும்பை அணிக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியது. அத்துடன் முதலாவது தகுதிச் சுற்று ஆட்டத்திலும் மும்பையிடம் வீழ்ந்தது. மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி தொடர்ச்சியாக 3 முறை தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. இந்த தோல்விகளுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய இறுதிப்போட்டியில் மும்பை அணியை பழி தீர்த்து சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் தட்டிச் செல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் தோனியின் ரசிகர்கள் உள்ளனர் .

You'r reading ஐபிஎல் பைனல் கோப்பை யாருக்கு? 3 முறை தொடர் தோல்வி..! மும்பையை பழி தீர்க்குமா தோனி படை!AZ Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை