விடாது துரத்தும் பிங்க் ராசி, இந்தியாவை மழை வென்றது!

by Rahini A, Feb 11, 2018, 09:21 AM IST
 
sa
 
இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, மழை குறிக்கிட்டதால் வெற்றி வாய்ப்பை இழந்தது இந்திய அணி.
 
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி,  ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா, முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
 
4-வது ஒரு நாள் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நேற்று நடந்தது, இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது, கேதர் ஜாதவ் நீக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டார், தென் ஆப்ரிக்க அணியில் ஜோன்டோ, இம்ரான் தாகிருக்கு பதிலாக டிவில்லியர்ஸ், மார்னே மார்கல் சேர்க்கப்பட்டனர், இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத டிவில்லியர்ஸ் காயத்திலிருந்து அணிக்கு திரும்பினார், வழக்கத்திற்கு மாறாக பிங்க் நிற ஜெர்சியுடன் 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி களமிறங்கியது.
 
ஏனென்றால், சார்லோட்டே மக்சிகே ஜோகனஸ்பர்க் அகாடமி மருத்துவனையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையிலும், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தென் ஆப்ரிக்க வீரர்கள் பிங்க் நிற ஜெர்சியுடன் களமிறங்கினார்கள்.
 
இதற்கு முன்பு வரை 5 முறை ‘பிங்க்’ நிற ஆடையில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள், அந்த 5 ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது,
ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தை பற்றி சொல்லவேண்டும் என்றால் இங்கு 400 ரன்களுக்கு மேல் அடிப்பது தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது, குறிப்பாக அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் இங்கு 44 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
 
டிவில்லியர்ஸ் இந்த மைதானத்தில் 11 போட்டிகளில் விளையாடி 100.85 என்ற சராசரி வைத்திருந்தார்.குறிப்பாக பிங்க் நிற சீருடையில் அவர் ஆடிய 5 ஆட்டங்களிலும் அபாரமாக ரன் குவித்து 112 ரன்களை சராசரியாக வைத்திருந்தார், மேலும் பிங்க் நிற சீருடையில் இந்த மைதானத்தில் 2 சதங்களை அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை மற்றும் அதிவேக சத சாதனையை (44 பந்துகளில 100) இதே மைதானத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்துள்ளார். இதனால் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
 
டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செயதது, இந்திய அணி 200 ரன்கள் எடுத்திருந்தபோது மின்னல் காரணமாக போட்டி சிறிது நேரம் தடைபட்டு பின் மீண்டும் போட்டி தொடங்கியது, இந்திய அணியில் தவான் (109), கோலி (75), தோனி (42) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 290 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.
 
அப்போது அந்த அணி 7.2 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்திருந்த நேரத்தில் மழை குறுக்கிட்டது. இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, தென் ஆப்ரிக்க அணி 28 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஆம்லா (33) அடித்தளம் அமைத்து கொடுத்துவிட்டு செல்ல, டிவில்லியர்ஸ் (26), மில்லர் (39) அதிரடி காட்டி வெளியேற, 26-வது ஓவரிலேயே 2 சிக்சர் அடித்த பெலுக்வாயோ (23) வெற்றியை உறுதி செய்தார். அவருடன் நின்று அதிரடி காட்டி அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற கிலாசன் (43) ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார், இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 25.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் சேர்த்து தனது முதல் வெற்றியை பதிவு செய்தது, இதனையடுத்து தொடரை சமன் செய்யும் வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் பிங்க் நிற ஜெர்சியுடன் விளையாடும் போதெல்லாம், தென் ஆப்பிரிக்க அணி வெற்றி வாகை சூடி வருகிறது.
 
பிங்க் நிற சீருடை அணிந்து இதுவரை தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய போட்டிகளின் விவரம், பாக்கிஸ்தானுக்கு எதிராக 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி (2013)
இந்தியாவுக்கு எதிராக 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (2013)
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 148 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (2015)
இங்கிலாந்துக்கு எதிராக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
(2016) இலங்கைக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (2017)
தற்போது இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (2018)
இதுவரை டிவில்லியர்ஸ் பிங்க் சீருடை அணிந்து ஆடிய 6 போட்டிகளில் 2 சதம், 2 அரை சதம்உள்பட மொத்தம் 476 ரன்கள் குவித்துள்ளார், சராசரி 95.
 
முதல் மூன்று போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப்-சாஹல் ஜோடி இந்த போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர், இருவரும் இணைந்து 11.3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி 119 ரன்களை வாரி வழங்கியுள்ளனர், (எக்கனாமி 10) ஆனால் முதல் மூன்று போட்டிகளில் இருவரும் சேர்த்து மொத்தம் 52.3 ஓவர்கள் வீசி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி 190 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தனர், (எக்கனாமி 3.57) இதில் ஒரு பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் இருவரும் இணைந்து நேற்றைய போட்டியுடன் சேர்த்து எடுத்த 24 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரே தொடரில் சூழல் பந்துவீச்சில் எடுக்கப்பட்ட அதிக விக்கெட்டுகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்பு 1999-ல் 7 போட்டிகள் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சுழல் மூலம் 24 விக்கெட்டுகள் கைப்பற்றியதே சாதனையாக இருந்து வருகிறது, அதை சமன் செய்த கையோடு அடுத்த போட்டியில் இந்த சாதனையை முறியடிக்கவும் காத்திருக்கிறது இந்த ஜோடி.
 
 
 
 
 
 
 

You'r reading விடாது துரத்தும் பிங்க் ராசி, இந்தியாவை மழை வென்றது! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை