வேலூர்: திமுகவுக்கு கை கொடுத்த வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் காலை வாரிய அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம்

High margin in Vaniyambadi assembly is the reason for dmks win in Vellore election

by Nagaraj, Aug 10, 2019, 09:59 AM IST

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுகவின் வெற்றிக்கு வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் கை கொடுத்ததே முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.அதே போல் ஆம்பூர், வேலூர் சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூடுதல் வாக்குப் பெற்றது. அதே வேளையில் குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கூடுதல் வாக்குகளை பெற்றாலும், வாணியம்பாடி தொகுதியில் திமுக பெற்ற மிக அதிக வாக்கு வித்தியாசமே, கதிர் ஆனந்த், வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்ட காரணம் என்றே கூறலாம்.

வேலூர் கோட்டையைப் பிடிக்கப் போவது யார்? என்பதற்கு விடை காணும் நாளாக நேற்றைய வாக்கு எண்ணிக்கை நாள் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியது என்றே கூறலாம். சினிமா காட்சிகளில் வருவது போல் ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஒவ்வொரு விதமான முடிவுகள் வெளியாகி விறுவிறுப்பை கூட்டி விட்டது. இதனால் க்ளைமாக்ஸ் வரை யாருக்கு வெற்றி கிட்டும் என்ற சஸ்பென்ஸை நீடிக்கச் செய்து திமுக, அதிமுக மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்தையே டென்ஷனாக்கி விட்டது எனலாம்.

ஓட்டு எண்ணிக்கையின் முதல் சுற்று முடிவிலேயே ஒரு பக்கம் திமுக முன்னிலை என ஒரு தரப்பும், அதிமுக முன்னிலை என மற்றொரு தரப்பிலும் செய்திகளை வெளியாகி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டனர். ஆனால் என்னவோ முதல் நான்கு சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தான் முன்னிலை வகித்தார். கிட்டத்தட்ட 16 ஆயிரம் வாக்குகள் வரை சண்முகம் முன்னிலை பெற அதிமுக வட்டாரம், இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். மாலைப் பத்திரிகைகளும் கொட்டை எழுத்தில் அதிமுக வெற்றி என்று போஸ்டர்களில் போட்டு கடைகளில் தொங்க விட்டன .

ஆனால் அடுத்து தான் அதிரடி திருப்பம் ஏற்பட ஆரம்பித்தது. 5-வது சுற்று முதல் கூடுதல் வாக்குகளை பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், ஏ.சி.எஸ்சின் முன்னிலையை படிப்படியாக குறைத்து 8-வது சுற்று முதல் முன்னிலை பெறத் தொடங்கி 20 ஆயிரம் வாக்குகள் வரை முன்னேற திமுக வட்டாரத்திற்கு உற்சாகம் பிறந்தது. அதிமுக தரப்பு சோகமானது. ஆனாலும் லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்த திமுக தரப்புக்கோ வாக்கு எண்ணிக்கை நிலவரம் மகிழ்ச்சியை தரவில்லை என்றே கூறலாம். இதனால் கொண்டாட்டங்களை உடனடியாக தொடங்கவில்லை.

அதற்கேற்றாற்போல் 13-வது சுற்று முதல் அதிமுக முன்னிலை பெறத் தொடங்கி 18 -வது சுற்றில் கதிர் ஆனந்தின் முன்னிலை 7 ஆயிரம் ஆக குறைத்து விட்டது. அடுத்து மூன்று சுற்றுகள் வரை இருந்த நிலையில், வெற்றி யாருக்கு என்பது மதில் மேல் பூனையாகி, இரு தரப்பிலுமே உச்சபட்ச டென்சன் எகிறிவிட்டது என்றே கூறலாம். ஆனால் ஒரு வழியாக அடுத்த சுற்றுகளில் இருவருக்கும் சம அளவு வாக்கு கிடைக்க ஒரு வழியாக 8141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வேலூர் கோட்டையில் வெற்றிக் கொடி நாட்டினார். வெற்றி உறுதி என்ற நிலை வந்த பிறகே திமுக தரப்பில் வெற்றிக் கொண்டாட்டங்களையே காண முடிந்தது.காலை முதல் அண்ணா அறிவாலயம் பக்கமே தலைகாட்டாத மு.க.ஸ்டாலினும் வெற்றிச் செய்திக்கு பின்னரே நிம்மதியாக அறிவாலயம் பக்கம் வந்தார்.

இந்த தேர்தல் முடிவில் வேலூர் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் முடிவுகள் வெவ்வேறாக அமைந்ததும் இந்த இழுபறிக்கு காரணம் என்றும் கூறலாம். வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலை பெற, குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றிருந்தது.

வேலூரில் 6374 வாக்குகளும், ஆம்பூரில் 8603 வாக்குகளும், வாணியம்பாடியில் அதிகபட்சமாக 22, 301 வாக்குகளும் திமுக அதிகம் பெற்றது. அதிமுகவோ குடியாத்தத்தில் 11,291, அணைக்கட்டு தொகுதியில் 9539, கே.வி.குப்பத்தில் 8109 வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தது.

இதில் வாணியம்பாடியில் பெற்ற அதிகமான முன்னிலை தான் திமுகவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து விட்டது.குறிப்பாக இங்கு தான் இஸ்லாமியர்களின் வாக்கு அதிகம். அந்த வாக்குகள் திமுக பக்கம் ஒட்டு மொத்தமாக சாய்ந்ததே திமுகவை கரை சேர்க்க உதவியுள்ளது என்று இப்போது பரபரப்பான பேச்சாகிக் கிடக்கிறது. இதேபோல் திமுக கூடுதல் ஓட்டுகளை பெற்ற ஆம்பூர், வேலூரிலும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடும் இழுபறியில் வேலூரில் திமுக வெற்றி வாக்கு வித்தியாசம் நோட்டாவை விட கம்மி

You'r reading வேலூர்: திமுகவுக்கு கை கொடுத்த வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் காலை வாரிய அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை