தமிழகத்தில் ஒரே நாளில் 4965 பேருக்கு கொரோனா.. சிகிச்சையில் 51 ஆயிரம் பேர்..
corona cases rise to 1.8 lakhs in tamilnadu.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது வரை 1.80 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் 11 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. தமிழகத்தில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பரவி வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் நேற்று(ஜூலை21) 4965 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 78 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 80,643 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4894 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 26,670 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று மட்டுமே 75 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 2626 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1130 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 88,377 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 256 பேருக்கும், காஞ்சிபுரம் 262, மதுரை 158, திருவள்ளூர் 366 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 10,289 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 8517 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதை விட அதிகமாக 9774 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
You'r reading தமிழகத்தில் ஒரே நாளில் 4965 பேருக்கு கொரோனா.. சிகிச்சையில் 51 ஆயிரம் பேர்.. Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News