ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்புக் கூறியுள்ளது. ஆலையைத் திறக்கக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இந்த தீர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. தீர்ப்பை வரவேற்று மக்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள், மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் சார்பில் வைக்கப்பட்ட வாதம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சீனியர் வக்கீல்கள் மாசிலாமணி, பி.எஸ்.ராமன், ஏ.எல்.சுந்தரேசன், அரியமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இவர்களில் ஸ்டெர்லைட் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரத்திடம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் கொண்ட நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை வழங்குவதற்கு முன்னால் இறுதிவாதத்தை கேட்டது. அப்போது பேசிய அரிமா சுந்தரம், ``சீனாவின் தூண்டுதலின் பேரில் அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தான் ஆலைக்கு எதிராக போராடுகிறார்கள், ஸ்டெர்லைட் ஆலைக்குள் வசிப்பது சென்னை அண்ணாநகரில் வசிப்பதைவிட பாதுகாப்பானது" என்று வாட்ஸ் அப் வதந்தியை அப்படியே நீதியரசர்கள் முன்னிலையில் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.














