டாமின் மூலம் தாது மணல் எடுக்க எடப்பாடிக்கு ஸ்டாலின் கோரிக்கை..

Stalin asked Edapadi palanisamy to allow Tamin to produce carnet sand.

by எஸ். எம். கணபதி, Sep 25, 2020, 15:36 PM IST

தாது மணல் உற்பத்தி செய்யத் தமிழக அரசின் டாமின் நிறுவனத்திற்கு உடனடியாக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். அதன் மூலம் 20 ஆயிரம் கோடி வருமானத்தைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு : தாதுமணல் கொள்ளையைத் தடுக்க, பெருங்கனிமக் கொள்கை வகுக்கப்படும் என்று 2013-ல் அறிவித்த அ.தி.மு.க. அரசு, இது வரை தூங்கிக் கொண்டிருக்கிறது.

“அரசே தாதுமணல் எடுத்து விற்பனை செய்யும் பணியை மேற்கொள்ளும்” என்று 2016ல் தேர்தல் அறிக்கை மூலம் வாக்குறுதி அளித்து விட்டு- அதையும் மறந்து, இன்றுவரை அதற்கான பணிகளை முடுக்கி விடாமல், யாருக்காகவோ காத்திருப்பதும், காலம் தாழ்த்துவதும் கடும் கண்டனத்திற்கு உரியது. “தாது மணல் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயைப் பெருக்கி, கொரோனா பேரிடர் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியும்” என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு அறிக்கை அளித்திருப்பதாகவும் செய்தி வருகிறது.

இந்நிலையில், வைகுண்ட ராஜனுக்கு வழி விடுகிறதா டாமின் நிறுவனம் என்று ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை கூர்ந்து கவனிக்கத்தக்கது. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளைய அடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கார்னட் மெகா ஊழல் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார், ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைத்தார். அந்தக் குழு ஆய்வு செய்து, அளித்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.இந்தக் கொள்ளைக்கு எல்லாம் காரணம் என்று, மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசாலும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசாலும், குற்றம் சாட்டப்பட்ட வைகுண்ட ராஜன் மீதான வழக்குகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தாது மணல் முறைகேடுகள் குறித்த அனைத்து வழக்குகளையும் அ.தி.மு.க. அரசு முனைப்புடன் நடத்தாமல், ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் தாதுமணல் விற்பனையை 7 வருடமாகத் துவக்காமல், மாநில அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் (IREL) நிறுவனத்துடன் இணைந்து, தாது மணல் உற்பத்தி செய்ய முயற்சித்து வருகிறோம் என்றும்; புரிந்துணர்வு ஒப்பந்தம் போட முயற்சி செய்கிறோம் என்றும்; சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் கொள்கை விளக்கக் குறிப்புகளில் அ.தி.மு.க. அரசு வெறும் ஒப்புக்காகக் கூறி வருகிறதே தவிர; இன்று வரை, தாது மணலை எடுத்து விற்க, எந்த ஆக்கப்பூர்வமான முயற்சியையும் முதலமைச்சர் பழனிசாமி எடுக்கவில்லை. தொழில் துறை முதலீடுகளை ஈர்க்கப் போடப்படும் வழக்கமான “வெற்றுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” போலவே, அ.தி.மு.க. அரசு, தாது மணல் விற்பனையிலும் ஏதோ உள்நோக்கத்துடன் தொடர்ந்து கபட நாடகம் ஆடி வருகிறது.

தாது மணல் கொள்ளையில் “மெகா ஊழல்” நடந்திருக்கிறது என்று கூறி, குழு ஒன்றைப் போட்டு விசாரித்த அ.தி.மு.க. அரசு, இன்றுவரை வைகுண்ட ராஜனைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது ஏன்? எதை எதிர்பார்த்து? முதலமைச்சர் பழனிசாமிக்கும், தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கும் உள்ள ரகசியக் கூட்டணியின் மர்ம உறவுகள் என்ன? அதற்காக நடந்துள்ள பேரம் என்ன?ஆகவே, தற்போது ஏறக்குறைய 5 லட்சம் கோடியைத் தொட்டு விட்ட மாநில அரசின் நிதி நெருக்கடியை மனதில் கொண்டு, தாது மணல் உற்பத்தி செய்ய டாமின் நிறுவனத்திற்கு உடனடியாக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். அந்தப் பணிகளை விரைவுபடுத்தி, அரசுக்கு வர வேண்டிய 20 ஆயிரம் கோடி வருமானத்தை, இந்த நிதி நெருக்கடி நேரத்திலாவது பெறுவதற்கு, நேர்மையான முயற்சிகளை வெளிப்படையாக, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

தாது மணல் கொள்ளை குறித்து அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகள், அது தொடர்பான விசாரணைகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்றும்; இந்தப் பிரச்சினையில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தி, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மதிப்பிலான தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கையை, தமிழக மக்களுக்கு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading டாமின் மூலம் தாது மணல் எடுக்க எடப்பாடிக்கு ஸ்டாலின் கோரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை