தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரமாக சரிவு.. 5 மாவட்டங்களில் பரவல் நீடிப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 2, 2020, 11:17 AM IST

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே நேற்று(நவ.1) புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் மிகக் குறைவானோருக்கே தொற்று பாதித்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில்தான் இது வரை கொரோனா தொற்று நீடித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. செப்டம்பர் முதல் வாரத்தில் இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. இதன்பின், தினமும் புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று(நவ.1) 2504 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 27,026 பேராக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 3644 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 94,880 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 30 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவது குறைந்திருக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைந்தவர்களுக்கே பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனால், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 20,984 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 685 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 145 பேர், திருவள்ளூர் 136, கோவையில் 248, சேலம் மாவட்டத்தில் 110 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 85 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் இது வரை 2 லட்சத்து, 533 பேருக்கும், செங்கல்பட்டில் 43,840 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 38,023 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25,629 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 29,222 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரமாக சரிவு.. 5 மாவட்டங்களில் பரவல் நீடிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை