தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரமாகச் சரிவு.. சென்னை, கோவையில் பரவல்..

by எஸ். எம். கணபதி, Nov 24, 2020, 09:32 AM IST

தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் 90 லட்சத்திற்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்குப் பின்பு படிப்படியாகக் குறைந்து நாளொன்றுக்குத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது.

மாநிலம் முழுவதும் நேற்று(நவ.23) 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1619 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 77,679 பேராக உள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1904 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 47,762 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 17 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,622 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்குப் புதிதாக 1800 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். பின்பு படிப்படியாக நோய் பரவல் குறையத் தொடங்கியது. நவம்பர் முதல் தேதியன்று சென்னையில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிறகு இதுவும் குறையத் தொடங்கியது. நேற்று 483 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கோவை மாவட்டத்தில் நேற்று 140 பேருக்குத் தொற்று பாதித்தது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 99 பேருக்கும், திருவள்ளூர் 79, காஞ்சிபுரம் 72, சேலம் 77, திருப்பூர் 67, ஈரோடு மாவட்டத்தில் 72 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்கே நேற்று தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 12,504 பேருக்கும், செங்கல்பட்டில் 46,960 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 40,578 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27,327 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் தற்போது 12,245 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

You'r reading தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரமாகச் சரிவு.. சென்னை, கோவையில் பரவல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை