தமிழகத்தில் கொரோனா நோயாளி எண்ணிக்கை 5725 ஆக குறைந்தது..

by எஸ். எம். கணபதி, Jan 19, 2021, 09:32 AM IST

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தற்போது 5725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கடந்த ஆண்டு, சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது. நோய் பரவல் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குறையத் தொடங்கியது.

தற்போது பல மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 20க்கும் கீழ் குறைந்து விட்டது. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு நேற்று(ஜன.18) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, புதிதாக 551 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களைச் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 31,323 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 758 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 13,326 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நோய்ப் பாதிப்பால் நேற்று 8 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,272 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5725 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். தினமும் சராசரியாக 750 பேர் குணம் அடைந்து வருவதாலும், புதிய பாதிப்பு 600க்கு கீழ் குறைந்து வருவதாலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று புதிதாக 158 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 28 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 69 பேருக்கும் சேலம் மாவட்டத்தில் 24 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் புதிதாகத் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

You'r reading தமிழகத்தில் கொரோனா நோயாளி எண்ணிக்கை 5725 ஆக குறைந்தது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை