மண்ணில் கால்படாத மக்கள் செல்வர் தினகரன்! - நக்கலடித்த ஜெய் ஆனந்த்-Exclusive

Jai Anand Comment on TTV Dinakaran

Nov 30, 2018, 13:53 PM IST

கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை முன்வைத்து சசிகலா குடும்பத்துக்குள் குஸ்தி மோதல் நடந்து கொண்டிருக்கிறது. ` நிலத்தில் கால் வைக்காமல் வேனில் இருந்தபடியே பேசுகிறார் தினகரன். நாங்கள் அப்படியல்ல' எனக் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வருகிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்.

தஞ்சை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் கஜா புயலால் நிர்மூலமாகிவிட்டன. விவசாயப் பயிர்களும் தென்னை மரங்களும் அடியோடு அழிந்துவிட்டன. தற்போது நிவாரணப் பணிகளில் அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டன. அண்ணா அறிவாலத்தில் இருந்து ஏராளமான நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தார் ஸ்டாலின். இதேபோல், பாஜக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, பாமக என அனைத்துக் கட்சிகளும் நிவாரண உதவிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன.

அதேநேரம், காவிரி டெல்டாவை மையமாக வைத்து அரசியல் நடத்தி வரும் தினகரனும் புயல் பாதித்த பகுதிகளில் வேன் மூலமாகச் சென்று மக்களிடம் பேசி வருகிறார். இதுவரையில் அந்த மக்களுக்குப் பணமாக எந்த உதவிகளையும் தினகரன் செய்யவில்லை. ஸ்டாலினைப் போல அரசின் நிவாரண நிதிக்கும் அவர் உதவி செய்யவில்லை. ஆளும்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசி மட்டும் வருகிறார்.

இந்தக் காட்சிகளைப் பதிவிட்டுள்ள ஜெய் ஆனந்தின் போஸ் மக்கள் பணியக நிர்வாகிகள், ' களத்தில் மக்களோடு மக்களாக நிற்கும் எங்கள் மக்கள் தளபதியைப் பாருங்கள். வேனில் இருந்து இறங்காமல் பேசிச் செல்லும் அந்த மக்கள் செல்வனைப் பாருங்கள்' என நக்கலடித்துள்ளனர். மேலும், தஞ்சை, புதுக்கோட்டை பகுதி மக்களுக்குக் கடந்த ஏழு நாள்களாக செய்து வரும் உதவிகளையும் பட்டியலிட்டுள்ளனர்.

அரிசி, உணவு, குடிநீர், வேட்டி, போர்வை எனக் கணக்கில்லாமல் வாரியிறைத்து வருகிறார் ஜெய். இந்தப் பதிவுகளில் அவரை மக்கள் தளபதி என்றும் தங்க தளபதி என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். 'டெல்டா பகுதிகளில் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார் எங்கள் தளபதி' எனவும் அடைமொழி வைத்து அவரை அழைக்கத் தொடங்கியுள்ளனர். ' எந்தநேரத்தில் தேர்தல் வந்தாலும் தஞ்சை எங்கள் கோட்டை என்பதை நிரூபிப்போம். அமமுகவினரை ஓடவிடுவோம். தஞ்சை, திருப்பரங்குன்றம், திருவாரூரில் அண்ணா திராவிடர் கழக கொடி பறக்கும்' என சூளுரைத்திருக்கிறார் ஜெய் ஆனந்த்.

- அருள் திலீபன்

You'r reading மண்ணில் கால்படாத மக்கள் செல்வர் தினகரன்! - நக்கலடித்த ஜெய் ஆனந்த்-Exclusive Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை