முழு மனதுடன் ஓய்வு பெறுகிறேன், இது சத்தியம்- பொன் மாணிக்கவேல் பேட்டி
IG PonManickavel Promises full hearted rest Interview speech
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்று ஓய்வு பெறும் நிலையில், தான் முழு மனதுடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
பொன் மாணிக்கவேல் 1958-ம் ஆண்டு பிறந்தார். 1989-ம் ஆண்டு குரூப் 1 அதிகாரியாக தேர்வு பெற்று, தமிழக காவல் துறையில் நேரடி டிஎஸ்பியாக சேர்ந்தார். பின்னர் 1996-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதில் திறமையாகச் செயல்பட்டு பாராட்டு பெற்றார். குறிப்பாக, குஜராத் அருங்காட்சியகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலைகளை மீட்டு சரித்திர சாதனை படைத்தவர்.
பொன்.மாணிக்கவேல் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வு பெற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, "காவலர்களுக்கு பணிச்சுமை இருக்கிறது. அதனால், அவர்களின் குடும்பத்தினரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரை சட்டம் என்ன சொல்லுகிறதோ அதை மட்டுமே செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்கள் தங்களின் உயரதிகாரிகளின் சேவகர்கள் அல்ல. அதிகாரிகளின் அறிவுரையைக் கேட்க வேண்டும். அவர்களின் அறிவுரை சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். வேலையை முடித்துவிட்டு பேசாமல் செல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதன்பிறகு, செய்தியாளர் ஒருவர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வியெழுப்பியபோது "எனக்குத் தெரியாது" என பதிலளித்தார்.
பின்னர், முழுமனதுடன் ஓய்வு பெறுகிறீர்களா என கேட்டபோது, "சத்தியமாக முழுமனதுடன் ஓய்வு பெறுகிறேன். ஊடகங்களின் ஆதரவுடன் முழு மனதுடன் ஓய்வு பெறுகிறேன். அதிகாரிகளால் தான் எனக்குப் பிரச்சினை. அரசியல்வாதிகளாலோ அரசாலோ எந்தத் தொந்தரவும் இல்லை" என பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.
You'r reading முழு மனதுடன் ஓய்வு பெறுகிறேன், இது சத்தியம்- பொன் மாணிக்கவேல் பேட்டி Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News