மீண்டும் வெளிநாடு செல்லும் விஜயகாந்த் - மோசமாக சீரழிந்த உடல் உறுப்புகள்! Exclusive

Vijayakanth health worsening

Dec 1, 2018, 15:34 PM IST

உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டார் விஜயகாந்த். பொருளாளர் பதவிக்கு என்னை நியமித்திருக்கிறார் கேப்டன். இப்படியொரு பதவியை எனக்கு வழங்குவார் என எதிர்பார்க்கவில்லை' எனக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கண்ணீர்விட்டார் பிரேமலதா.

பொதுவெளியில் தேமுதிக என்ற கட்சியே கரைந்துபோய்விட்டதால், அதைக் கரையேற்ற வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருந்தது. இதற்குக் காரணம், நாளுக்குநாள் நலிவடைந்து வந்த விஜயகாந்த் உடல்நிலைதான்.

சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த அதேநேரம் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார் கேப்டன். கல்லீரல், பித்தப்பை சிகிச்சைக்காகத்தான் அமெரிக்கா சென்றிருந்தார். அந்த இரண்டு உறுப்புகளும் மிக மோசமாக சீர்கெட்டுவிட்டன என டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

அங்கு போனதும் சிகிச்சைகளைத் தொடங்கிவிடுவார்கள் என நம்பிக்கையோடு இருந்தார் பிரேமலதா. ஆனால், வழக்கமான நடைமுறைகளைச் செய்வதற்கே மூன்று வார காலம் ஆகிவிடும், அதுவும் அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைத்தால்தான் சிகிச்சை என டாக்டர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர்.

இதனால், சிகிச்சைகளை எடுக்காமலேயே ஊர் திரும்பினார். மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த விஜயகாந்த், தள்ளாடியபடியே கலைஞர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார். அந்தத் தள்ளாட்டம், கட்சியையும் தள்ளாட வைத்துவிட்டது.

இதை மீட்டெடுப்பதற்காக தினம்தோறும் தமிழிசையைப் போல டி.விக்களில் தோன்றிக் கொண்டிருக்கிறார் பிரேமலதா. கேப்டனும், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகக் கோளாறுக்கான அன்றாட சிகிச்சைகளை எடுத்து வந்தார்.

தற்போது, ஆஸ்திரேலியாவில் நல்ல சிகிச்சை கிடைக்கிறது என டாக்டர் ஒருவர் கூறியதன் அடிப்படையில், கேப்டனை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த சிகிச்சைக்குப் பிறகு அவரை முழுமையாக ஓய்வில் இருக்க வைக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

அதேபோல், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் தீவிர அரசியலில் ஈடுபட இருக்கிறார். “அரசியல் என்பது சேவை. பொறுப்பை தேடிப் போவது அல்ல அரசியல்; இளைஞர்களுடன் இணைந்து ஏற்கனவே என் தந்தை செய்ததை செய்ய விரும்புகிறேன். அரசியலில் தொடர்ந்து ஈடுபடப் போகிறேன்” எனக் கடந்த மாதம் அவர் அறிவித்தார். அவருக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பை வழங்குவதாக இருந்தனர். உடனடியாக பதவி கொடுத்தால் குடும்ப அரசியல் என விமர்சிப்பார்கள் என்பதால், எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பியை டம்மியாக அந்தப் பகுதிக்குக் கொண்டு வந்துள்ளனர். விரைவில் மாநிலப் பொறுப்புக்கு வருவார் விஜய பிரபாகரன் எனத் தகவல் கொடுக்கின்றனர் தேமுதிக பொறுப்பாளர்கள்.

- அருள் திலீபன்

You'r reading மீண்டும் வெளிநாடு செல்லும் விஜயகாந்த் - மோசமாக சீரழிந்த உடல் உறுப்புகள்! Exclusive Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை