அமெரிக்க பத்திரிகையான பார்ச்சூன் (Fortune) உலகத்திலுள்ள 500 பெருநிறுவனங்களை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது.
![IOC 123.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2018/08/blobid1533208689110.jpg)
பார்ச்சூன் ரேங்கிங் என்னும் இப்பட்டியலில் அமெரிக்க சில்லறை விற்பனை குழுமமான வால்மார்ட் முதலிடத்தை பிடித்துள்ளது. ஏழு இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ள இப்பட்டியலில் அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் (IOC) 137வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஐஓசி 168வது இடத்தில் இருந்தது.
கடந்த ஆண்டு 203வது இடத்திலிருந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் லிமிடெட் இந்த ஆண்டு 53 இடங்கள் முன்னேறி 148வது இடத்தைப் பிடித்துள்ளது. அதிக லாபமீட்டும் நிறுவனங்களுக்கான பட்டியலில் ரிலையன்ஸ் (RIL) 99 வது இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு இந்தப் பட்டியலிலேயே இடம் பெற்றிராத அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓஎன்ஜிசி ONGC) நிறுவனம், இந்த ஆண்டு 197வது இடத்தைப் பெற்றுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஓரிடம் முன்னேறி 216 இடத்திலும், பாரத பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) 314வது இடத்தையும் பெற்றுள்ளன.
டாடா மோட்டார்ஸ் 247ஆம் இடத்திலிருந்து 232க்கு முன்னேறியுள்ள நிலையில், பட்டியலில் இடம் பெற்றுள்ள ஏழாவது இந்திய நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், 295வது இடத்திலிருந்து 405வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலகின் இந்த 500 பெருநிறுவனங்களும் 2017-ம் ஆண்டில் 30 டிரில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளன. அதில் லாபம் மட்டும் 1.9 டிரில்லியன் டாலர். உலகின் 33 நாடுகளைச் சேர்ந்த இந்நிறுவனங்கள் 67.7 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்துள்ளன என்று பார்ச்சூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.