`சந்திப்பு நடக்காது… ஜாக்கிரதை!- யூ-டர்ன் அடிக்கும் வடகொரியா

by Rahini A, May 16, 2018, 13:41 PM IST

அமெரிக்கா - வடகொரியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியாவின் அபரிமிதமான அணு ஆயுதச் சோதனையால், தென்கொரியா கடுப்பானது. தூதரக உறவு முதல் வர்த்தக உறவு வரை அனைத்தையும் துண்டித்துக் கொண்டன இரு நாடுகளும்.

அணு ஆயுதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் பிரச்னை கொரிய தீபகற்பத்தையும் தாண்டி விவாதத்துக்கு உள்ளானது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா, `வடகொரியா அணு ஆயுதங்களையும் அதன் சோதனைகளையும் கைவிடவில்லை என்றால் விளைவு மோசமாக இருக்கும்’ என்று மிரட்டியது.

இதற்கு வடகொரியா எதிர்வினையாற்ற, பிரச்னை உலகம் முழுவதும் தீபற்றி எறிந்தது. ஐநா, ஜப்பான், ஆசிய நாடுகள் என அனைத்தும் வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. மூன்றாம் உலகப் போர் மூளுமோ என்று அச்சப்பட்ட நிலையில், வடகொரியா, `நாங்கள் அமைதி நோக்கி பயணிக்க விரும்புகிறோம்’ என்று பகிரங்க அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து, தென்கொரியாவுடன் சுமூக பேச்சுவார்த்தை மேற்கொண்டது. `அணு ஆயுதங்களையும் கைவிடுகிறோம்’ என்று அந்த சந்திப்புக்குப் பிறகு வடகொரியா அறிவித்தது. பின்னர்தான், அமெரிக்கா- வடகொரியா சந்திப்பு வரும் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த ராணுவப் பயிற்சி தென்கொரியாவிலேயே மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதனால் கொதிப்படைந்த வடகொரியா, `கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு எங்களின் அணு ஆயுதங்களை முழுவதுமாக துறக்கச் சொன்னால், அது சரிபட்டு வராது. இப்படியே போய்கொண்டிருந்தால் அமெரிக்காவுடனான் அமைதி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வரமாட்டோம்’ என்று கூறி அதிர்ச்சி கிளப்பியுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ராணுவ நடவடிக்கை தங்கள் நாட்டின் மீது போர் எடுப்பதற்காக என்று வடகொரியா அஞ்சுவதே இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading `சந்திப்பு நடக்காது… ஜாக்கிரதை!- யூ-டர்ன் அடிக்கும் வடகொரியா Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை